பிரதமரை தாக்க எதிர்க்கட்சி சதி! நான்தான் மோடியை மக்களவைக்கு வர வேண்டாம் என சொன்னேன்! - ஓம் பிர்லா
டெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தி, சீன விவகாரம், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தது புயலை கிளப்பியிருந்தது. எப்படி இருந்தாலும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் மோடி உரையாற்ற வேண்டும். எனவே அவரது பேச்சுக்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் உரையாற்றாமல் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இன்று நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு வேதனையான நாள். குடியரசுத் தலைவர் உரை முறையாக விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்து ,பாஜக அவையை முடக்கியது. இந்தியா கூட்டணியின் வலிமையான போராட்டத்தால் பிரதமர் மக்களவைக்கு வரமுடியாத சூழல் உருவானது.
நாடாளுமன்றம் என்பது விவாதத்திற்கான இடம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. அவரைப் பேசவிடாமல் தடுக்கிறது. சீனா நம் மீது தாக்குதல் நடத்த முன்னேறியபோது பிரதமர் முடிவெடுக்கப் பயந்து பொறுப்பை இராணுவ தளபதியின் தோள்களில் சுமத்தினார். அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குப் பயந்து, அதானியைக் காப்பாற்ற அமெரிக்க இந்தியா வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் நமது நாட்டின் எதிர்காலம் குறிப்பாக விவசாயம் அடகு வைக்கப்பட்டு விட்டது.
எப்ஸ்டீன் பைல்கள் உள்ளிட்ட விசயங்களை எதிர்க்கொள்ள முடியாமல் பிரதமரும்,பாஜகவும் அஞ்சுகிறார்கள். மக்கள் பிரச்சனைகளை, நாட்டைப் பாதிக்கக்கூடிய விசயங்களைப் பற்றிப் பேசவேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. இந்தச் சூழலில் போராட்டம் தவிர்க்க முடியாதது.இந்தியா கூட்டணி இதில் உறுதியாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications