இரட்டை இலை தாங்க.. முடக்கினால் ‛பக்கெட்’ சின்னம் வேண்டும்.. ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் தனக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு ‛பக்கெட்' சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

பாஜக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஓ பன்னீர் செல்வமே வேட்பாளராக போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். மேலும் இந்த தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் இரட்டை இலை அல்லது தனி சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் கூட ஓ பன்னீர் செல்வம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று ஓ பன்னீர் செல்வம் அணியின் புகழேந்தி 2 மனுக்கள் வழங்கினார். அதில் ஒரு மனுவில், ‛‛நாங்கள் தான் உண்மையான அதிமுக. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என வழக்குகளை சுட்டிக்காட்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்னொரு மனுவில், ‛‛இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். உண்மையான அதிமுக நாங்கள் தான். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்க இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் லோக்சபா தேர்தலில் ‛பக்கெட்' சின்னத்தை ஒதுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை பரிசீலனை செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஓ பன்னீர் செல்வத்துக்கு சின்னம் ஒதுக்கீடு செய்ய உள்ளது.












Click it and Unblock the Notifications