கொல்லாதே.. கொல்லாதே.. ஜனநாயகத்தை கொல்லாதே.. மோடி பேச்சுக்கு எதிராக தமிழக எம்பிக்கள் முழக்கம்!
டெல்லி: லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்றிய போது ஒட்டுமொத்த எதிர்க்கட்சி எம்பிக்களும் சபையின் மையப்பகுதியில் நின்று எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். அப்போது கொல்லாதே.. கொல்லாதே... ஜனநாயகத்தைக் கொல்லாதே.. என்பது உள்ளிட்ட முழக்கங்களை தமிழக எம்பிக்கள் தமிழில் எழுப்பி முழக்கமிட்டனர்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் மோடி தமது பேச்சின் தொடக்கத்தில், உலகின் மிகப் பெரிய தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது சிலருக்கு வலியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ச்சியான பொய்களை பரப்பியவர்களுக்கு பெரும் தோல்விதான் கிடைத்தது என்றார்.

அப்போது மோடியின் பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒன்றாக நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சபையின் மையப் பகுதிக்கு சென்று மோடியின் பேச்சுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும்; நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள், கொல்லாதே .கொல்லாதே... ஜனநாயகத்தைக் கொல்லாதே.. நீதி வேண்டும்.. நீதி வேண்டும்.. மணிப்பூருக்கு நீதி வேண்டும் என தமிழில் முழக்கமிட்டனர்.
இந்த முழக்கங்களுக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசினார். அத்துடன் ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது எனவும் சுட்டிக்காட்டினார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒரு பக்கம் எதிர்க்கட்சி எம்பிக்களின் இடைவிடாத அமளி முழக்கங்கள்..நடுவே பிரதமர் மோடி ஆவேசமான பேச்சு.. இன்னொரு பக்கம் சபாநாயகர் ஓம் பிர்லாவின் கடுமையான எச்சரிக்கை என இன்றைய லோக்சபா நிகழ்வுகள் களேபரமாக காட்சியளித்தது.












Click it and Unblock the Notifications