அடித்து ஆடும் "இந்தியா" கூட்டணி... 2 மாநில முக்கிய கட்சிகளை இழுத்து வரப் போகிறாராம் நிதிஷ்குமார்!
டெல்லி: "இந்தியா" கூட்டணியில் ஏற்கனவே 28 கட்சிகள் இணைந்துள்ள நிலையில் மேலும் 2 முக்கியமான மாநில கட்சிகளை இழுப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கி இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
லோக்சபா தேர்தலுக்காக பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. "இந்தியா" கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள் பாட்னா, பெங்களூர், மும்பையில் நடைபெற்று முடிவடைந்துள்ளன.
இந்தியா கூட்டணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ம.பி.யில் 4-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக டெல்லியிலும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
இதனிடையே "இந்தியா" கூட்டணியில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் 2 பிரதான கட்சிகளையும் இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தளம் கட்சி நீண்ட காலமாக பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் பரம எதிரியாக இருந்து வரும் கட்சி. தற்போது பாஜகவுடனான கூட்டணியிலும் இல்லை. 1984 சீக்கியர் படுகொலை உள்ளிட்டவைகளால் காங்கிரஸுடன் இணைவதில் அகாலிதளத்துக்கு தயக்கம் இருக்கிறது. இதனை உடைத்து அகாலி தளத்தை "இந்தியா" கூட்டணியில் இழுத்துவிட பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

இதேபோல ஹரியானாவில் முன்னாள் துணை பிரதமர் தேவி லால் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் சார்பாக உத்தவ் தாக்கரே, சரத்பவார், நிதிஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து அகாலி தளம், இந்திய தேசிய லோக் தளம் இரு கட்சிகளும் விரைவில் அதிகாரப்பூர்வமாக "இந்தியா" கூட்டணியில் இணையும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications