உச்சநீதிமன்ற உத்தரவு வரட்டுமே-ஒருநாள் பொறுங்க..தேர்தல் ஆணையர் தேர்வில் மோடியுடன் ராகுல் காந்தி மோதல்
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கடும் எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டே இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை உள்ளடக்கிய குழு தேர்வு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வரும் வரை புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டாம் என்பதுதான் ராகுல் காந்தியின் நிலைப்பாடு.
நாட்டின் இந்திய தேர்தல் ஆணையன் என்பது ஒரு தலைமை ஆணையர், 2 ஆணையர்களை உள்ளடக்கியது. தேர்தல் ஆணையர்கள் அனைவருமே மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். தேர்தல் ஆணையர்களாக இருப்பவர்களில் ஒருவர், வயது, பணி ஆகியவற்றின் மூப்பின் அடிப்படையில் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வருவது வழக்கமான நடவடிக்கை.

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
ஆனால் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையர்களை பரிந்துரைக்க பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பும் தெரிவித்தது.
புதிய சட்டமும் உச்சநீதிமன்ற வழக்கும்
மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு. அதாவது தேர்தல் ஆணையர்களை பரிந்துரைக்கும் குழுவில் பிரதமர், ஒரு மத்திய அமைச்சர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மட்டுமே இடம் பெறுவர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெறமாட்டார். இதுதான் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம். இந்த புதிய சட்டதுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான இயக்கம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை வரும் 19-ந் தேதி நாளை நடைபெற உள்ளது.
டெல்லியில் மோடி, அமித்ஷா, ராகுல் ஆலோசனை
இந்த நிலையில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவி காலம் இன்று பிப்ரவரி 18-ந் தேதி முடிடைகிறது. இதனால் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றனர்.
ராகுல் காந்தி எதிர்ப்பு
பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 5 பேரின் பெயர்கள், தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு முன்வைக்கப்பட்டன. அப்போது இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, புதிய தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை (பிப்ரவரி19) நடைபெற உள்ளது. ஆகையால் உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு பின்னர் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால ராகுல் காந்தியின் இந்த கருத்தை பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நிராகரித்துவிட்டனர். இதனையடுத்தே புதிய தலைமை தேர்தல் ஆணையராக, சீனியர் என்ற அடிப்படையில் ஞானேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications