ராஜ்யசபா ‘தாமரை’ தீம்.. இருக்கைகள் அதிகரிப்பு.. என்ன பிளான்? சர்ச்சையை கிளப்பும் சென்ட்ரல் விஸ்டா!
டெல்லி : புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமையவிருக்கும் ராஜ்யசபா 'தாமரை' தீமில் அமைக்கப்படுவதும், இரு அவைகளிலும் இருக்கைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளன.
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகள் மற்றும் உட்புற வடிவமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் படங்களை அரசு வெளியிட்டுள்ளது.
லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவும் ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 ஆகவும் உள்ள நிலையில் புதிய கட்டிடத்தில் மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன.
இதனால், தொகுதி மறுசீரமைப்பை கணக்கில் கொண்டே பாஜக அரசு சீட் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.
பரபர சூழல்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் துவங்கியது.. ராஜ்யசபா தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு
இந்திய நாடாளுமன்றம்
இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்து 96 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பழைய கட்டிடத்தை நாட்டின் தொல்பொருள் அருங்காட்சியமாக மாற்றிவிட்டு, குடியரசு தலைவர் மாளிகைக்கும் இந்தியா கேட்டுக்கும் நடுவிலான பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 971 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் 64,500 ச.மீ அளவில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வருகிறது.
புதிய கட்டிடம்
இந்நிலையில், தற்போது புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் தொடங்கும் என செய்தி வெளியானது. ஆனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இதனை மறுத்துள்ளார். இன்னும் முழுமையாக பணிகள் முடியவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு புதிய கட்டிடத்தில் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மிகப்பெரிய வளாகம்
செண்ட்ரல் விஸ்டா எனப்படும் இந்த புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவையில் 384 இருக்கைகள், மக்களவையில் 888 இருக்கைகள் மற்றும் இந்த இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் இணைந்து பங்கேற்கும் கூட்டுக் கூட்டம் நடைபெறும் பட்சத்தில் 1,224 பேர் வரை கலந்து கொள்ளும் வகையில் மக்களவை அமைக்கப்படுகிறது.
சீட் எண்ணிக்கை உயர்வு
தற்போது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 ஆகவும் உள்ளது. இந்நிலையில் புதிய கட்டிடத்தில் இரு அவைகளிலும் இருக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன. இதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
தொகுதி மறுசீரமைப்பு
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு எழுந்துள்ளது. பாஜக ஆதிக்கம் உள்ள உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாறாக, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. இது பாஜகவுக்கு மேலும் பலம் கொடுக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த முயற்சியை எதிர்த்து வருகின்றன.
தாமரை தீம்
மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் சில மாற்றங்களும் சர்ச்சையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைகின்றன. மாநிலங்களவையில் இருக்கைகளுக்கு தாமரை நிறம் அளிக்கப்படுகிறது. மாநிலங்களவை 'தாமரை' தீமில் அமையவிருக்கிறது. தாமரை பாஜகவின் சின்னம் என்பதால், இதற்கு எதிர்க்கட்சிகள் விவாதத்தைக் கிளப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.