கும்பல் வன்முறைக்கு எதிராக குற்றவியல் சட்டத்தில் திருத்தம்.. நாடாளுமன்றத்தில் அமித் ஷா அதிரடி பதில்
டெல்லி: நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக குற்றவியல் நடைமுறை சட்டத்தை திருத்த அரசு உத்தேசித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பதில் அளித்தார்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கும்பல் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.
குழந்தை கடத்த வந்ததாக வதந்திகள் பரவியதால் சில ஆண்டுக்கு முன்பு நாட்டின் பல்வேறு இடங்களில் கும்பலாக சேர்ந்து பலரை மக்கள் கடுமையாக தாக்கினர். இதில் அப்பாவிகள் அடித்தே கொல்லப்பட்டனர்.

கடும் நடவடிக்கை
இதேபோல் பசுவை கடத்தி செல்வதாக வதந்தி பரவிய காரணத்தாலும் பலர் கும்பல்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறியது. மேற்கண்ட கொடூர சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் இச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகிறது.

கும்பல் வன்முறை
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி நசிர் ஹுசைன், இந்த கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் ராஜ்யசாவில் இன்று கேள்வி எழுப்பினார். அவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏராளமான கும்பல் வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளது. இது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்று கேட்டார்.

சட்ட நடவடிக்கை
இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "கும்பல் வன்முறை பிரச்சினையை சமாளிக்க மற்றும் பரிந்துரைகளை அளிக்க, மத்திய அரசு அமைச்சர்கள் குழுவை உருவாக்கியுள்ளது, அவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளனர், இந்த விஷயத்தை அரசு அறிந்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 300 மற்றும் 302 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சட்டத்தில் திருத்தம்
கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். அத்துடன் நாங்கள் கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications