ராம், ராம் என சொல்லிக்கொண்டு..கத்தியால் வெட்டுகிறீர்கள்! VB–G RAM G சட்டம் குறித்து கார்கே விமர்சனம்
டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதில், VB-G RAM G என்று புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த சட்டம் நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு மாநிலங்களவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
மாநிலங்களவையில் அவர் பேசியதாவது, "யூபிஏ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை மூலம் வாழ்வாதாரத்தை வழங்கும் நோக்கத்தைக் கொண்டது. இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவந்தால், மக்கள் தங்கள் தலைவர்களை வீதிகளில் நடமாட விடமாட்டார்கள்.

இந்த புதிய சட்டம் மூலம், ஏழைகளை பலவீனப்படுத்தி, மீண்டும் அவர்களை அடிமைத்தனத்திற்கு தள்ள பாஜக முயற்சிக்கிறது. MGNREGA ஒரு மிக முக்கியமான சட்டம். அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது ஏழைகளுடன் தொடர்புடைய சட்டம், இதில் தலையிடுவது நல்லதல்ல. பழைய சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சரியல்ல. மக்கள் உங்களை வீதிகளில் நடமாட அனுமதிக்க மாட்டார்கள்.
சாதாரண மக்களை, குறிப்பாக உழைக்க முடியாத ஏழைகளுக்கு உணவு வழங்க MGNREGA அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நீங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கிறீர்கள். இதற்குப் பின்னால் உங்கள் நோக்கம் என்ன? ஏழை மக்களை பலவீனப்படுத்துவது. அவர்களை நசுக்கி மீண்டும் அடிமைத்தனத்தில் தள்ளுவதுதானே?.
2021ல் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை போல, இந்த புதிய மசோதாவையும் நீங்கள் திரும்பப் பெற வேண்டிய நேரம் மீண்டும் வரும். நாங்கள் வீதிகளுக்கு வருவோம். நாங்கள் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்வோம், ஆனால் இந்தச் சட்டத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.
MGNREGA திட்டத்தை அதன் பழைய வடிவத்திலேயே தொடர வேண்டும். அதை மேலும் பலப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து ஏழைகளும் அழிந்துவிடுவார்கள். பழைய திட்டம் கிராமப்புற குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதிலும், வறுமை ஒழிப்பிலும் குறிப்பிடத்தக்க பாசிட்டிவான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.
பழைய திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். அதைச் செய்யாதீர்கள். வாய் நிறைய ராம், அக்குளில் கத்தி என்பது போல, ஏழைகளுக்காக 'ராம், ராம்' என்று சொல்லிக்கொண்டே, கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு அவர்களை முன்புறம், பின்புறம், கழுத்திலும் வெட்டுகிறீர்கள். MGNREGA திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து நீங்கள் முயற்சித்தால், உங்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள்" என்று விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications