முதல்ல அஸ்ஸாம் ரைபில்ஸ் படையை வெளியேற்றுங்க.. ராஜ்நாத் சிங்கை கிடுகிடுக்க வைத்த மணிப்பூர் மக்கள்!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மணிப்பூர் மக்கள் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தி இருப்பது மத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் இருந்து மைத்தேயி- குக்கி இனக் குழுக்களிடையே மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநில அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி 175 பேர் இம்மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 1,100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பாமல் இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் போராட்டம்: மணிப்பூர் வன்முறையை மத்திய பாஜக அரசு அடக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. மணிப்பூர் வன்முறையை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்தது; மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிடவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் புகார். இதனால் நாடாளுமன்றத்தையே எதிர்க்கட்சிகள் முடக்கினர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வந்தனர்.
ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு: இந்நிலையில் மைத்தேயி இனக்குழுவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் குழு இன்று டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்து பேசியது.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை: இந்த சந்திப்பின் போது மணிப்பூர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தது. அதில் மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என மைத்தேயி குழு பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கை மத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐநாவிடம் புகார்: அத்துடன் இல்லாமல் குக்கி இனக் குழுவினர், தாங்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி ஐநா சபைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மைத்தேயி இனப் பிரதிநிதிகள் அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தெரிவித்துள்ளனர்.
அமித்ஷா கருத்து: மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மியான்மரில் இருந்து ஊடுருவிய குக்கி இன மக்கள்தான் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு குக்கி இனமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குக்கி இன மக்களும் மிசோரம் மாநில பூர்வகுடிகளான மிசோ மக்களும் தொப்புள் கொடி உறவுகள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.












Click it and Unblock the Notifications