ஓயாத வன்முறை:மணிப்பூர் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான டிஜிபி!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் தொடரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது அம்மாநில டிஜிபி ராஜீவ் சிங் நேரில் ஆஜரானார்.
மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக இன மோதல்கள் தொடருகின்றன. மைத்தேயி-குக்கி இனக்குழுக்களிடையேயான இம்மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மணிப்பூர் இனமோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து அகதிகளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனாலும் மத்திய, மாநில அரசுக மணிப்பூர் வன்முறையை ஒடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகள் புகார்.
மேலும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் குழு மணிப்பூர் சென்று நிலைமையை ஆய்வு செய்தது. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தும் மனு கொடுத்தனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முழக்கங்கள் எம்பி இரு சபைகளையும் முடக்கி உள்ளனர்.
மேலும் மணிப்பூர் நிலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிருப்தியை வெளியிட்டது. மணிப்பூரில் மாநில அரசு செயல்படுகிறதா? மணிப்பூர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மணிப்பூரில் காவல்துறை என்னதான் செய்கிறது? என சரமாரி கேள்விகளையும் கண்டனங்களையும் முன்வைத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
மணிப்பூரில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், இதுபோல் ஒரு சம்பவம்தானா? இன்னும் எத்தனை சம்பவங்களோ? இந்த சம்பவங்களில் ஏன் 14 நாட்கள் தாமதமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார்தான் வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தனர்.. அப்படியான போலீசாரிடம் ஏன் இன்னமும் விசாரணை நடத்தவில்லை எனவும் சரமாரியான கேல்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது. இது தொடர்பாக பதிலளிக்க மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் வழக்குகள் தொடர்பான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது மணிப்பூர் மாநில டிஜிபி ராஜீவ் சிங் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications