மணிப்பூர் வன்முறை: நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவின் 3 அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!
டெல்லி: மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு 3 அறிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையே வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். மோரே எனும் எல்லை நகரத்தை சேர்ந்த மக்கள், அகதிகளாக மியான்மரின் தமு பகுதியிலும் தஞ்சமடைந்தனர்.
பல மாதங்களாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு தடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதனால் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. மேலும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வந்தன.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக வழக்குகளும் தொடரப்படன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மணிப்பூர் மாநில அரசை கடுமையாக சாடியது. மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்தது. அத்துடன் ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் பெண் நீதிபதிகள் குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக இந்த குழு ஆய்வு செய்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு 3 அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளன. இதனை இன்று தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த 3 அறிக்கைகளையும் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications