டெல்லி துணை முதல்வர்.. மணிஷ் சிசோடியாவை கைது செய்தது ஏன்? காரணங்களை அடுக்கிய சிபிஐ.. பரபர அறிக்கை!
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்படது ஏன்? என்பதற்கான காரணங்களை சிபிஐ அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
டெல்லி: விசாரணைக்கு ஆஜரான டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த நிலையில், மணிஷ் சிசோடியா கைது செய்யப்படது ஏன்? என்பதற்கான காரணங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.
இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் கொடுக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதில் பல்வேறு முறைகேடு புகார்களும் எழுப்பப்பட்டது. துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனை
இந்த உத்தரவை தொடர்ந்து ஆம்ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கயை திரும்ப பெற்றுக்கொண்டது. இருந்த போதிலும், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது

சி.ஜி.ஓ. வளாகத்தில் போராட்டம்
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரானார். முன்னதாக தன்னை போலி வழக்கில் சிக்க வைக்க பாஜக முயற்சிப்பதாக மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தார். மணிஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜராக இருந்ததால் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் உள்பட கட்சியினர் பலரும் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள சி.ஜி.ஓ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிசோடியா கைது செய்யப்பட்டது ஏன்?
இதனால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். இன்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்ட அப்பகுதி காணப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான மணிஷ் சிசோடியாவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மணிஷ் சிசோடியாவின் கைது தரம் தாழ்ந்த அரசியல் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக மத்திய அரசை சாடியிருந்தார். இந்த நிலையில், மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சிபிஐ பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது.

8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது
இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021-22 ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையில் அமல்படுத்துவதில் நடைபெற்ற முறைகேடு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன் அடையும் நோக்கில் நடந்து கொண்டது ஆகியவை விசாரிப்பதற்காக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 14 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மணிஷ் சிசோடியா காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

மழுப்பலான பதில்களை அளித்தார்
மணிஷ் சிசோடிய அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. விசாரணைக்கு உரிய முறையில் அவர் ஒத்துழைக்கவும் இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் உணர்ந்தனர். ஆதாரங்களை காட்டி கேள்வி எழுப்பப்பட்ட போதும் மழுப்பலான பதில்களை கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என அதிகாரிகள் கருதினர். எனவே அவர் கைது செய்யப்பட்டார். நாளை நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications