மீண்டும் தப்பிய மோடி.. தேர்தல் ஆணைய தீர்ப்பில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்
பிரதமர் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக 10 க்கும் அதிகமான தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது.
ஆனால் இந்த விதிமீறல் புகார்கள் அனைத்திலும் இவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று வரிசையாக தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் தினமும் மோடிக்கு எதிரான புகார்களை தள்ளுபடி செய்து கொண்டே வருகிறது.
பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது பாலக்கோடு தாக்குதல் குறித்து பேசியது, அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது, ராஜீவ் காந்தியை மோசமாக விமர்சித்து பேசியது ஆகியவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. அதேபோல் அமித் ஷா கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார் என்றும் புகார் அளிக்கப்பட்டது.
இப்படி அளிக்கப்பட்ட 10 புகார்களில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இதனால் காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மோடி, அமித் ஷா மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து தற்போது 9 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மோடி, அமித் ஷா மீது தவறு எதுவும் இல்லை என்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து இரண்டு நாட்கள் முன் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், மோடி மற்றும் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்த முடியாது. தேர்தல் ஆணையத்திற்கு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு தேர்தல் விதிமீறல் புகாரில் இருந்து நிம்மதி கிடைத்துள்ளது.