இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியா! உடனே 'குடியுரிமை' கொடுத்த கனடா- சேட்டைகள் அம்பலம்!
டெல்லி: இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடி கனடாவில் பதுங்கிய சீக்கிய தீவிரவாதிகளுக்கு அந்நாடு திட்டமிட்டே குடியுரிமை வழங்கி இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு போராட்டம் 1990களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் சீக்கியர் தனிநாடு கோரிக்கையை முன்வைப்பவர்கள் இந்தியாவை விட்டு தப்பி ஓடி கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

மேலும் இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு எனும் பெயரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு விட்டு போலி பாஸ்போர்ட் மூலம் அல்லது சட்டவிரோதமாக பாகிஸ்தான் வழியாக கனடா செல்வதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் கனடாவின் மக்கள் தொகையில் 2.1% பேர் சீக்கியர்கள். கனடாவில் அரசியலில் வலிமை பெற்று வருகின்றனர் சீக்கியர்கள். இதனால் சீக்கியர்கள் பக்கம் நிற்கிறது கனடா.
இதைவிட இந்தியாவால் தேடப்படுகிற தீவிரவாதிகள் என ஒரு பட்டியல் இன்டர்போல் மூலம் அனுப்பி வைக்கப்படும் போது, அந்த தீவிரவாதிகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறதாம் கனடா. தற்போது இந்தியா- கனடா உறவு முறியக் காரணமான காலிஸ்தான் புலிப்படை தலைவர் நிஜ்ஜார், கனடாவில் அகதியாக பதுங்கி இருந்தார். பின்னர் கனேடிய குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். அவரது குடியுரிமை விண்ணப்பம் நிலுவையில் இருந்துள்ளது.
காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் நிஜ்ஜார், இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1990களின் பிற்பகுதியில் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தலைமறைவானார். பின்னர் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவை விட்டு தப்பி ஓடினார். கனடாவில் இருந்து கொண்டே காலிஸ்தான் புலிப் படை எனும் புதிய தீவிரவாத இயக்கத்தை உருவாக்கினார். அத்துடன் நிற்காமல் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலையாளிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்களையும் போய் சந்தித்து பேசியிருக்கிறார் நிஜ்ஜார். இத்தகைய பயங்கரவாதி நிஜ்ஜார்தான் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னதாக, இந்தியா தேடுகிறது என இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வந்த உடனேயே, நிஜ்ஜாரின் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு உடனே கனேடிய குடிமகனாக்கப்பட்டுள்ளார். இப்படித்தான் பல சீக்கிய தீவிரவாதிகளை 'கனடா' குடிமகன் என பாதுகாத்து வருகிறது அந்நாடு. இது இந்தியாவுக்கு நீண்டகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த போதும் இருதரப்பு உறவு நலன் கருதி சுட்டிக்காட்ட மட்டுமே செய்தது. தற்போது கனடா ஆக்ரோஷம் காட்ட இந்தியாவும் பதிலடி தந்து வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications