மருத்துவ மேல்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு சரி- சுப்ரீம்கோர்ட் திட்டவட்ட தீர்ப்பு
டெல்லி: மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்தின்படி சரியானதுதான் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு - OBC-க்கு 27% இடஒதுக்கீடு வழங்க கடந்த ஆண்டு ஜூலை 29-ந் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த வழக்கில் இணைந்து கொண்டன. இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 7-ந் தேதியன்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும் உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு நடப்பாண்டில் மட்டும் அமல்படுத்தலாம்; இது தொடர்பான விரிவான தீர்ப்பு மார்ச் மாதம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று விரிவான தீர்ப்பை வழங்கியது. அதில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனப்படி சரியானதுதான் என திட்டவட்டமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications