ஓமிக்ரான் லேசானது என்று யார் சொன்னது?.. அலர்ட் கொடுக்கும் மாநிலங்கள்.. இந்த புள்ளி விவரங்களை பாருங்க
டெல்லி: இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது. ஓமிக்ரான் வைரஸ் ஒருபக்கம் ஆட்டம் போட்டு கொண்டிருக்க, இதன் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,70,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பதிவாகி உள்ளது. நாட்டின் தற்போதய நிலை கொரோனா முதல் அலையை போல் உள்ளது. ஓமிக்ரான் டெல்டா வைரஸை விட வீரியம்மிக்கது என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கூறி இருந்தது.

ஓமிக்ரான் வைரஸ் லேசானவை அல்ல
ஆனால் ஓமிக்ரான் மிகவும் லேசானவை என்றும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் இதன் தாக்கம் மிக குறைவாக உள்ளது என்று தகவல்கள் பரவுகின்றன. இதனால் இந்தியாவில் ஓமிக்ரான் விஷயத்தில் மக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இப்படி ஓமிக்ரான் வைரஸ் லேசானது என்று கூறப்பட்டாலும் ஓமிக்ரான் வைரஸ் லேசானது அல்ல; இதை சாதரரணமாக நினைக்க கூடாது என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் புள்ளி விவரங்கள் நமக்கு சுட்டிகாட்டுகிறது.

இந்த புள்ளிவிவரங்களை பாருங்க
அதாவது மகாரஷ்டிரா மாநிலம் மும்பையில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் பெறும் 96% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள்தான். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் மாநிலத்தில் ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படுவர்களின் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அவசர சிகிச்சை பிரிவில்(ஐ.சி.யூ) சேருவதற்கு 30 மடங்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நமது தமிழகத்தை எடுத்துக் கொண்டால் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட 90% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால்தான் தமிழகத்தில் ஓமிக்ரானால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?
இது பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், 'ஓமிக்ரான் தாக்கம் அதிகமாக இல்லை என்று மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். தற்போது தடுப்பூசி செலுத்தப்படுவதால் மட்டுமே ஓமிக்ரான் பாதிப்பு நமக்கு லேசாக தெரிகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆக்சிஜன் சிகிச்சை மிகவும் அவசியமாகிறது என்று அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். நாம் மேற்கண்ட புள்ளி விவரங்கள் ஓமிக்ரானின் வீரியத்தையும், தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
Recommended Video

தடுப்பூசியின் முக்கியத்துவம்
மருத்துவ நிபுணர்கள் கூற்றுப்படி தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது அவசியமாகிறது. ஆகவே கூடிய விரைவில் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனாவை நமது நாட்டில் இருந்தே நிரந்தரமாக விரட்டியடிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications