கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை: நாடு முழுவதும் இடைவிடாமல் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம்!
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவம் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையேயான அரசியல் மோதலாகவும் திசைமாறி உள்ளது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் பயிற்சி மருத்துவர் படுகொலையின் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரியின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆர்ஜி கர் மருத்துவமனையை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். ஆர்ஜி கர் மருத்துவமனை விவகாரமானது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜகவால் திசை திருப்பிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்த போஸும் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். கொல்கத்தாவில் ஒரு வாரமாக போராடி வரும் மருத்துவ மாணவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்கின்றனர்.
டெல்லியிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் நிர்மான் பவன் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கொல்கத்தாவில் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் பேரணி நடத்தினர். சண்டிகரிலும் கொல்கத்தா சம்பவத்துக்கு நீதி கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications