18 உயிர்களை பறித்த.. சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்து! மேகாலயா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை தீவிரமாக கருதிய மேகாலயா உயர் நீதிமன்றம், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வெடி விபத்து நடைபெற்றபோது சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து பிடிஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த டிஜிபி ஐ. நோங்ராங், "சரியான எண்ணிக்கையை அறிய முடியவில்லை. மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது" என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் எச்.எஸ். தங்காங் மற்றும் டபிள்யூ. டியேங்டோ அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த இந்த வெடி விபத்து குறித்த, ஊடகச் செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், கடந்த ஜனவரி 14-ஆம் தேதியும் இதே போன்ற ஒரு விபத்து நடந்தும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. இத்தகைய செயல்களைத் தடுக்க அமலாக்க முகமைகள் தவறியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிமன்றம், கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுரங்க உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யவும், அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு முடிந்தவரை உடனடி உதவியும், மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், பிப்ரவரி 9 அன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பதையும் விளக்குமாறும் துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications