ஹனிமூன் கொலை.. காதலனுக்கு லொகேசன் அனுப்பி.. கணவனை கொல்ல ரூட் போட்டு கொடுத்த சோனம்
சில்லாங்: மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் காதலனுடன் இணைந்து மனைவியே கூலிப்படை மூலம் கணவனை கொலை செய்து கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குற்றத்தை மனைவி சோனம் தரப்பில் மறுத்து வருகிறார்கள். ஆனால் காவல்துறை விசாரணையில் சோனமே காதலன், கூலிப்படையினருக்கு தங்களது லொகேசனை பகிர்ந்து இருப்பிடம் குறித்து அப்டேட் செய்த தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கு, சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி திருமணமானது. இரண்டு குடும்பத்தின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ஹனிமூன் செல்வது தொடர்பான பேச்சு வந்தவுடன் சோனம் மேகாலயா செல்லலாம் என்று கூறியுள்ளார்.

மனைவி சொல்லே மந்திரம் என்று ராஜாவும் சரி என்று சொல்லிவிட்டார். ராஜா மட்டும் தான் ஹனிமூன் மனப்பான்மையில் சென்றுள்ளார். சோனம் அவரை கொலை செய்வதற்கான திட்டத்துடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா மற்றும் சோனம் கடந்த மே 20 ஆம் தேதி மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றனர். மே 23 ஆம் தேதி அவர்கள் மாயமாகினர்.
இதுதொடர்பாக அவர்களின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இருவரையும் தேடினார்கள். கடந்த ஜூன் 2 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மறுபக்கம் சோனம் நிலை என்ன ஆனது தெரியாததால் வழக்கில் மர்மம் நீடித்தது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு தாபாவில் சோனமை காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். திடீர் திருப்பமாக தனது காதலனுடன் இணைவதற்காக, சோனமே இந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியானது. சோனம், அவரின் காதலன் ராஜ் குஷ்வஹா இணைந்து கூலிப்படை மூலம் ராஜாவை கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சோனம், ராஜ் குஷ்வஹா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோனம் நடத்தி வந்த குடும்ப தொழிலில் ராஜ் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அவர் சோனமை விட வயதில் குறைவானவர். ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்டு, காதலர்கள் இணைந்து வாழ திட்டமிட்டுள்ளனர். ஆனால், நான் குற்றவாளி அல்ல. என்னை கடத்தி சென்றுவிட்டனர் என சோனம் கூறி வருகிறார்.
மறுபக்கம் த்ரில்லர் படங்களை விஞ்சுமளவுக்கு இந்த வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "கூலிப்படை மூலம் கொலை செய்வது ராஜின் திட்டம். இதற்காக அவன் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு கும்பலிடம் ரூ.50,000 முன் பணம், ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளான்.
அதற்கு மேகாலயா பகுதியை தேர்வு செய்தது சோனம். புதுமண தம்பதி ஹனிமூன் சென்றவுடன், காதலன் ராஜ் மத்தியப்பிரதேசத்தில் தான் இருந்துள்ளார். ஆனால் அவர்களின் பின்னாலேயே கூலிப்படையினரை அனுப்பி கண்காணித்து வந்துள்ளான். சோனம் காதலன் ராஜ் மற்றும் கூலிப்படையினருக்கு வாட்ஸப்பில் லொகேசனை பகிர்ந்து தங்களின் இருப்பிடத்தை பற்றி அப்டேட் செய்துள்ளார்.
ஒருகட்டத்தில் ராஜ் குஷ்வஹாவும் மேகாலயா வந்துவிட்டான். அவனும் கூலிப்படையுடன் இணைந்து தம்பதியை நோட்டமிட்டுள்ளான். சோனம் தான் ஹனிமூனை நீட்டித்து கூலிப்படையினருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி கொண்டு கொலையை அரங்கேற்றியுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்." என்றனர்.












Click it and Unblock the Notifications