ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை தேர்தலில் போட்டியில்லை- மெகபூபா முப்தி
டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 மற்றும் 35a பிரிவுகளின் கீழ் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் வரை தேர்தல் அரசியலில் தான் பங்கேற்க போவதில்லை என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஓமர் அப்துல்லா , மெகபூபா முப்தி உள்ளிட்ட பல தலைவர்களும் அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் . படைகள் குவிக்கப்பட்டன.

இரண்டு வருடங்கள் கழித்த நிலையில் காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு தினங்களுக்கு முன்பு சுமார் மூன்றரை மணி நேரம் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மறுபடி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும், அதன் பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில்தான் இந்தியா டுடே ஆங்கில ஊடகத்துக்கு மெகபூபா முப்தி அளித்துள்ள சிறப்பு பேட்டியில் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பாருங்கள் .
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டில்தான் திருப்பி பெறப்பட்டது. அதை திரும்ப தாருங்கள் என்று கேட்பது பிரிவினைவாதம் கிடையாது. ஜம்மு காஷ்மீருக்கு பழையபடி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது நரேந்திர மோடியுடனான சந்திப்பின் முக்கிய நோக்கம் கிடையாது. மாநில மக்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் பிரதமரை சந்தித்தேன்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு எளிதாக நிறைவேற்றி விடாது என்பது தெரியும். ஆனால் எங்காவது ஒரு தொடக்கம் தேவை. இந்த கோரிக்கை நிறைவேறும் வரை குப்கர் கட்சிகளின் கூட்டணி தொடரும். காஷ்மீர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்ப தரப்படாதவரை நான் வாக்கு அரசியலில் பங்கேற்க போவது கிடையாது. தேர்தல் நடந்தால் போட்டியிடப் போவது கிடையாது. இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications