மாநில அரசுகளின் பணத்தை பிடுங்கும் மத்திய அரசு.. 100 நாள் வேலை திட்டம் விவகாரத்தில் ராகுல் கடும் ‛அட்டாக்'
டெல்லி: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மாநில அரசுகளின் பணத்தை மத்திய அரசு பறிக்கிறது. இது அனைத்து மாநிலங்கள் மீதான தாக்குதல் என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்டவற்றுக்கு 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த வேளையில் மல்லிகார்ஜூன கார்கே, ‛‛அனைத்து மாநில தேர்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்'' என்று அட்வைஸ் வழங்கினார். அதுமட்டுமின்றி சமீபத்தில் மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (100 நாள் வேலை) விபி-ஜி ராம் ஜி என்று பெயர் மாற்றம் செய்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விஷயத்தில் அடுத்ததாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது.
அதன்பிறகு மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற திட்டங்கள் கிராம மக்களின் மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் மத்திய அரசின் தலையீடு என்பது அந்த திட்டத்தை பலவீனப்படுத்துகிறது.
தற்போது இந்த திட்டத்தின் மூலமாக மாநிலங்களுக்கு சொந்தமான பணத்தையும், மாநிலங்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அப்பட்டமாக மத்திய அரசு பறித்து கொள்கிறது . அதுமட்டுமின்றி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது கிராமங்களின் உள்கட்டமைப்புக்கான திட்டமாகும். இதன்மூலம் உள்கட்டமைப்புகள் மீதும் மத்திய அரசு தாக்குதல் நடத்தி உள்ளது.
எம்என்ஆர்இஜிஏ திட்டம் என்பது சாதாரண வேலைக்கான திட்டம் கிடையாது. இது முன்னேற்றத்துக்கானது. இந்த திட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி இதுபற்றி எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் மாற்றி உள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போல் இது பிரதமர் மோடியால் ஒருதலைபட்சமாக ஆலோசனை எதுவும் மேற்கொள்ளாமல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் உள்ள பழங்குடியினர், தலித்துகள், பிசிக்கள், ஏழை பொதுப்பிரிவினர், சிறுபான்மையினர் பெரிதும் துன்பப்பட போகின்றனர். மேலும் இந்த திட்டம் அதானிக்கு முழுமையாக பயனளிக்கப்போகிறது'' என்று விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications