மிலிட்டரி ஸ்டைல் ஆக்கிரமிப்பு! மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? அதிருப்தியில் திரிணாமுல் காங்கிரஸ்
டெல்லி: மேற்கு வங்கத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மாநில காவல்துறையின் எண்ணிக்கையை விட, பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மத்திய அரசு மிலிட்டரி ஸ்டைல் ஆக்கிரமிப்பு மேற்கொள்ள முயற்சிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
கடந்த வாரம் கொல்கத்தாவின் சயின்ஸ் சிட்டி பகுதியில், மத்திய ஆயுதக் காவல் படைகளின் அனைத்துப் பிரிவுகளின் தலைவர்களும் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்தினர். இந்தியத் தேர்தல் வரலாற்றில், தேர்தல் நடக்கும் ஒரு மாநிலத்தில் அனைத்துப் படைத் தலைவர்களும் இப்படிச் சந்திப்பது இதுவே முதல்முறை. இதை ராணுவ பாணியிலான ஆக்கிரமிப்புத் திட்டம் என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

வங்காளத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 2.4 லட்சம் (2,400 கம்பெனிகள்) மத்தியப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 2021 தேர்தலில் 845 கம்பெனிகள் மட்டுமே இருந்தன. தற்போது அது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டத் தேர்தலின் போது, ஒவ்வொரு 140 வாக்காளர்களுக்கும் ஒரு பாதுகாப்பு படை வீரர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரத்தின் போது 290 கம்பெனிகளும், ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு 900 கம்பெனிகளும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால், மேற்கு வங்கத்தில் 2,400 கம்பெனி வீரர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மணிப்பூர் மற்றும் காஷ்மீர் போன்ற எல்லைப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பைக் குறைத்துவிட்டு, வங்காளத்தில் படைகளைக் குவிப்பது தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் கேலி என்று மகுவா மொய்த்ரா சாடியுள்ளார்.
ஏன் இவ்வளவு பெரிய படைக்குவிப்பு?
மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இந்தப் படைக்குவிப்பை நியாயப்படுத்த சில தரவுகளை முன்வைக்கின்றன. அதாவது, கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த தேர்தல் வன்முறைகளில் 35% மேற்கு வங்கத்தில் மட்டுமே நடந்துள்ளது. 2021 தேர்தலில் மட்டும் 58 பேர் உயிரிழந்தனர். 2020 முதல் நடந்த 77 வன்முறைச் சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முதன்மை காரணியாக இருந்ததாக ACLED தரவுகள் கூறுகின்றன.
முன்னதாக 8 கட்டங்களாக நடந்த தேர்தல், இந்த முறை இரண்டே கட்டங்களாக (ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29) குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் அதிக தொகுதிகளுக்குப் பாதுகாப்பு வழங்க அதிக வீரர்கள் தேவைப்படுகிறார்கள். எனவேதான் அதிக வீரர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு கூறி வருகிறது.












Click it and Unblock the Notifications