கைவிரித்த அதிமுக.. குஜராத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Recommended Video
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
மோடி அரசில், ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான இவரை இப்பதவியில் அமர வைத்துள்ளார் மோடி.
தேர்தலில் போட்டியிடாத ஜெய்சங்கரை, ராஜ்யசபா உறுப்பினராக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குஜராத் சட்டசபையிலிருந்து இவரை தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத்தில் காலி
குஜராத் பாஜக எம்எல்ஏக்களால், அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் இருவருமே முறையே, காந்திநகர் மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று லோக்சபாவுக்கு தேர்வாகிவிட்டனர். எனவே அவர்கள் வகித்த ராஜ்யசபா எம்பி பதவி காலியாகிறது. எனவே குஜராத்திலிருந்து ஜெய்சங்கரை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவிடம் சிபாரிசு
முன்னதாக, தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் ஜெய்சங்கரை ராஜ்யசபா தேர்ந்தெடுக்க பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஜெய்சங்கர் தமிழர் என்பதால், இதுதான் பொருத்தமாக இருக்கும் என பாஜக தலைமை, அதிமுக தலைமைக்கு சிபாரிசு செய்தது.

அதிமுக மறுப்பு
அதிமுகவை பொறுத்தளவில், 1 ராஜ்யசபா எம்பியை தேர்ந்தெடுக்கும் நிலையில் இப்போது உள்ளது. எனவே, அதையும் ஜெய்சங்கருக்காக விட்டுத்தர தயார் இல்லை என கூறிவிட்டது. எனவே, ஜெய்சங்கர், குஜராத் சட்டசபையிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாக உள்ளார்.

6 மாத காலத்தில் எம்.பி
பாமகவுடன் அதிமுக ஏற்படுத்திக் கொண்ட தேர்தல் ஒப்பந்தப்படி, அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக கூறியிருந்தது. எனவே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன், ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. விதிமுறைப்படி, மத்திய அமைச்சராக ஒருவர் பதவி வகித்தால், பதவியேற்ற 6 மாத காலத்திற்குள், நாடாளுமன்றத்தின், இரு அவைகளில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராக வேண்டும்.












Click it and Unblock the Notifications