லோக்சபா தேர்தல்.. உடனடியாக அமலுக்கு வந்தன நடத்தை விதிமுறைகள்... ஆணையம்
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசேக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சுனில் அரோரா கூறுகையில் 17-ஆவது லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாநில அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினோம்.

பல்வேறு துறைகளோடும் பேசி தேர்தலை சுமூகமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம். வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம். வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வது குறித்து ஆலோசித்தோம்.
சிபிஎஸ்இ தேர்வு, திருவிழாக்கள் குறித்தும் கருத்தில் கொண்டோம். 23 மாநிலங்களில் 100 சதவீத வாக்காளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுவிட்டன. மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள்.
8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 9 லட்சமாக இருந்த வாக்குச் சாவடிகள் இந்த முறை 10 லட்சமாகியுள்ளன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வேட்பாளர்களின் புகைப்படமும் தெரியும். தற்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. இதை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்.
பூத் ஸ்லிப் மூலம் வாக்களிக்க முடியாது. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு படையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தலை பாதுகாப்பாக நடத்த சிஆர்பிஎப் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள். வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் காட்ட வேண்டும். நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications