நேற்று அசாம்-இன்று சிக்கிம்! வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்..மக்கள் அச்சம்
நேற்று மாலை அசாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நேற்று அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா குலுங்கியது. நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு வானுயர்ந்த கட்டிடங்கள் பலவும் நொடிப்பொழுதில் தரைமட்டம் ஆகின.

பலி 34 ஆயிரத்தை தாண்டியது
கட்டிட இடிபாடுகளுக்குள்ளும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர். நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்து விட்ட போதிலும் அங்கு கட்டிட இடிபாடுகளை தோண்ட தோண்ட இன்னும் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் இரு நாடுகளிலும் சேர்த்து நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சர்வதேச அளவிலும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவில் நிலநடுக்கம்
இந்தியாவிலும் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் பலரும் எச்சரித்து இருந்தனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்தியாவில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நேபாளம், ஆப்கானிஸ்தானில் ஏற்படும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இங்கு உணரப்படுவதும் வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதுமாக உள்ளது.

சிக்கிமில் அதிகாலையில் நிலநடுக்கம்
இந்த நிலையில் நேற்று அசாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நேற்று மாலை 4.20 மணியளவில் அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.15 மணிக்கு சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

மக்கள் அச்சம்
சிக்கிமின் யுக்சோம் நகரத்திற்கு வடமேற்கே 70 கி.மீட்டர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். கடுமையான குளிர் நிலவியபோதும் சில இடங்களில் மக்கள் நிலநடுக்க அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியில் நின்றதையும் பார்க்க முடிந்தது. வடகிழக்கு மாநிலங்களில் 12 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இரு நிலநடுக்கங்களும் மிதமானதுதான் என்றாலும் சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அது ஏற்படுத்திய சேதமும் மக்கள் மத்தியில் சற்று கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications