தேர்தல் நேரத்தில் என்ன மெசேஜ் அது.. வாட்ஸ் அப்பில் செய்தி.. தேர்தல் ஆணையம் போட்ட ‘திடீர்’ உத்தரவு!
டெல்லி: விக்சித் பாரத் செய்திகளை வாட்ஸ் அப் மூலமாக மக்களுக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்துமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் 100-வது சுதந்தர தினவிழா கொண்டாடப்பட உள்ள 2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் அறிவித்திருந்தார். அதை நோக்கிய பயணத்தில் அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

விக்சித் பாரத் என்ற தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் பல முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் தகவல்களை மக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில், வாட்ஸ்-அப் மூலம் செய்திகளாக தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக 'விக்சித் பாரத்' என்ற பெயரில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசு செலவில் பாஜக திட்டங்கள் பற்றி வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதன் காரணமாக, அரசு செலவில் இதுபோன்ற பிரச்சாரம் செய்யக்கூடாது, இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் என்று எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.
இந்நிலையில், விக்சித் பாரத் மெசேஜ் அனுப்புவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விக்சித் பாரத் மூலம் மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications