நேரம் ஒதுக்குங்கள்.. உங்களை அறிய முயற்சியுங்கள்.. மோடியின் அறிவுரை!
Recommended Video
டெல்லி: ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுக்கு மோடி அளித்துள்ள 3வது பேட்டியில், தியானம் குறித்து விளக்கியுள்ளார். அது நமது வாழ்க்கையில் ஏற்படுத்தும் சாதகமான தாக்கங்கள் குறித்து விவரித்துள்ளார். இமயமலையிலிருந்து திரும்பியதும், மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தனது முயற்சிகளை உடனே தொடங்கினார். கொஞ்சம் கூட அவர் தாமதிக்கவில்லை. அகமதாபாத்துக்குச் சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர சேவகராக இணைந்தார்.
"நாங்கள் இணைந்து ஆர்எஸ்எஸ் ஆபீஸை சுத்தம் செய்தோம், டீ தயாரித்தோம், உணவு தயாரித்தோம். பாத்திரங்களைக் கழுவினோம். இந்தப் புதிய வாழ்க்கையானது, இமயமலையில் நான் பெற்ற அமைதி உணர்வை பாதித்து விடாதபடி பார்த்துக் கொண்டேன். இதனால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களை என்னை நானே சுயசோதனை செய்து பார்த்துக் கொள்ள ஒதுக்கினேன். இதுதான் எனது வாழ்க்கையை நான் சரியான முறையில் கொண்டு செல்ல உதவுகிறது".
"எனது ஆர்எஸ்எஸ் பணிகளுக்கு மத்தியிலும் எனது மாமாவின் கேன்டீன் பணிகளையும் நான் இடை இடையே பார்த்துக் கொள்ள முடிந்தது என்று கூறுகிறார் மோடி. நகர வாழ்க்கையின் மோகத்தில் மூழ்கி விடாமல் தன்னைப் பார்த்துக் கொள்வதில் கவனமுடன் இருந்தார் மோடி. இமயமலைப் பயணத்தின்போது தனக்குக் கிடைத்த அனுபவத்தை தனது பணிகளின்போது பயன்படுத்திப் பார்த்தார்.
தீபாவளி சமயத்தில், மக்கள் தொடர்பு இல்லாத இடத்திற்குச் செல்வதை வழக்கமாக்கினார். 5 நாட்கள் யாருடனும் தொடர்பு இல்லாமல், ரேடியோ கேட்காமல், டிவி பார்க்காமல், செய்தித் தாள் கூட படிக்காமல் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார். காட்டுக்குப் போய் விடுவார். அங்கு தனது வாழ்க்கையை அசை போட்டுப் பார்ப்பார்.
"இந்த தனிமையான நேரத்தில்தான் எனது வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்க முடியும். இதுபோன்ற அனுபவங்கள்தான் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் என்னால் எளிதாக கையாள உதவுகின்றன. நான் யாரைச் சந்திக்கப் போகிறேன் என்று என்னிடம் பலர் கேட்பார்கள். என்னையே சந்திக்கப் போகிறேன் என்று நான் பதிலளிப்பேன்"
சுய பரிசோதனைக்காக நாம் நமக்கென நேரம் ஒதுக்குவது அவசியம். நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிய இது உதவும். இளைஞர்கள் இதைச் செய்ய வேண்டும். தனது பிசியான பணிகளுக்கு மத்தியிலும் கூட தனக்கென நேரம் ஒதுக்கி தன்னையே பரிசோதித்துப் பார்த்துக் கொள்வார் மோடி. இது அவரது வலிமையை மேலும் கூட்டியது. சவால்களை சந்திக்கும் பக்குவத்தைக் கொடுத்தது. வேகமான இந்த உலகில் நமது வாழ்க்கை குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும், நமக்கு தேவையான சிந்தனைகளை இது நமக்கு அளிக்கும்.
உண்மையான வாழ்க்கையை அதன் பிறகுதான் நீங்கள் வாழ ஆரம்பிப்பீர்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் உங்களது வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும். உங்களுக்குள் அதிக நம்பிக்கை உருவாகும். எல்லாமே உங்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுக்கும் எனவேதான் உங்களுக்குத் தேவையான ஒளியை உங்களிடமிருந்தே பெற முடியும். அதை வெளியில் தேடாதீர்கள் என்று நான் ஒவ்வொருவருக்கும் சொல்லி வருகிறேன். எல்லாமே உங்களிடமே உள்ளது.
ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள 5 பேட்டிகளில் தனது அனுபவம், தான் பெற்ற வாழ்க்கைப் பாடம் குறித்து விவரித்துள்ளார். முதல் பகுதியில் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார். தனது தாயார் குறித்தும் அவர் விவரித்துள்ளார். 2வது பகுதியில், தனது வாழ்க்கைப் பாதை குறித்த தெளிவு பெற தான் மேற்கொண்ட நீண்ட பயணம் குறித்து விவரித்துள்ளார்.
இங்க பாரப்பா.. லஞ்சம் மட்டும் வாங்காதே.. மோடியிடம் வாக்குறுதி வாங்கிய தாயார்!