இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடியின் விமர்சன பேச்சு! பிரதமரின் வெப்சைட்டில் மிஸ்ஸிங்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையில் பேசியது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது. ஆனால், அவரது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில், பரப்புரையில் பேசிய சில முக்கியமான விஷயங்கள் விடுபட்டிருக்கின்றன.
நாடு முழுவதும் சமீபத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. எனவே இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பரப்புரை மேற்கொண்டிருந்த மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சொல்லாததை குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
பிரசாரத்தில் மோடி பேசியதாவது, "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியவர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன்சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார்.
இவ்வாறு அவர் பேசியது உண்மைக்கு மாறான தகவல் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் விளக்கமளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்களும் இதற்கு பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
மறுபுறம் மோடி பேசியது குறித்து முழு தகவல் அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாதது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. வழக்கமாக பிரதமர் ஆற்றிய உரைகள் அனைத்தும் அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.narendramodi.in/ -ல் பதிவேற்றப்படும். நேற்று ராஜஸ்தானில் அவர் பேசியதும் இந்த தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
ஆனால், 'இஸ்லாமியர்கள்', 'ஊடுருவல்காரர்கள்', 'அதிக குழந்தைகளை பெற்றெடுப்பவர்கள்' உள்ளிட்ட வார்த்தைகள் மோடியின் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்ததில் குறிப்பிடப்படவில்லை. இந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதற்கான வீடியோ ஆதாரம் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் பேசியதை வைத்து எதிர்க்கட்சிகள், பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இப்படி இருக்கும் போது, அவர் பேசியதை முழுமையாக அப்லோட் செய்தால், தாமாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டதை போல ஆகிவிடும். எனவேதான் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும் பாஜக வேண்டும் என்றே விட்டுவிட்டது என அரசியல் விமர்சகர்கள் விளக்கமளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications