ஆதார் நம்பகமானதா? கேள்வியெழுப்பும் மூடிஸ் நிறுவனம்.. மத்திய அரசு சொன்ன பதில் இதுதான்
டெல்லி: இந்திய குடிமக்களின் கைரேகை மற்றும் கருவிழி என உயிரியல் அடையாளத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆதார் அடையாளத்தின் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச முதலீட்டாளர் சேவை நிறுவனமான மூடிஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
இந்தியாவில் ஆதார் கொண்டுவரப்பட்டதே பெரும் சர்ச்சைகளுக்கு இடையில்தான். தொடக்கத்தில் ஆதார் கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னாட்களில் இது அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த அடையாள அட்டை பெறுவதற்கு இந்திய குடிமகனின் கருவிழி அடையாளம் மற்றும், விரல் ரேகைகள் ஆகியவை அவசியமானதாக இருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த ஆதார் அடையாளத்தின் நம்பகத்தன்மை குறித்து பிரபல முதலீட்டாளர் சேவை நிறுவனமான மூடிஸ் விமர்சித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி வரையிலான நிலவரப்படி சுமார் 76 கோடி இந்தியர்கள் ரேஷன் கார்டுகளில் ஆதாரை இணைத்திருக்கிறார்கள். அதேபோல 28 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் கேஸ் சிலிண்டர் மானியத்திற்காக தங்களது ஆதார் அட்டையை சமையல் எரிவாயு இணைப்புடன் இணைத்திருக்கின்றனர். 78.8 கோடி பேர் ஆதாரை வங்கி கணக்குடன் இணைத்திருக்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில், ஆதார் அமைப்பில் உள்ள பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையில் சில கோளாறுகள் எழுந்திருப்பதாக மூடிஸ் குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக ஆதார் அட்டையை வைத்திருப்பவர்களில் சிலருக்கு அவர்களுடைய பயோமெட்ரிக் தகவல்கள், ஆதார் கார்டில் உள்ள பயோ மெட்ரிக் தரவுகளுடன் ஒத்து போகவில்லை என்று குற்றசாட்டுகள் ஆங்காங்கே சில எழுந்திருப்பதாகவும், இதனால் சில சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியவில்லை என்றும் மூடிஸ் குற்றம்சாட்டியுள்ளது. மட்டுமல்லாது இதை சரி செய்ய ஆதார் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால் அரசு மானியங்களை நம்பியுள்ள சிலர் பாதிக்கப்படுவார்கள் என்றும் மூடிஸ் விமர்சித்துள்ளது.
இந்தியாவின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலைகளில் இந்த பயோமெட்ரிக்கில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மூடிஸ் கூறியுள்ளது. ஆனால் இதை மத்திய அரசு கடுமையாக மறுத்திருக்கிறது. "எந்தவித ஆதாரங்களும், அடிப்படை தகவல்களும் இல்லாமல் உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை மூடிஸ் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோடிக்கணக்கான மக்கள் ஆதாரை கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.
சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் கூட ஆதாரின் பங்கை பாராட்டியுள்ளன. எனவே இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது. மூடிஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளும், மத்திய அரசுகளின் மறுப்பும் ஒருபுறம் இருக்க மறுபுறம், சில சமூக செயற்பாட்டாளர்கள் ஆதார் விவகாரத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதாவது பயோமெட்ரிக் அடையாளங்களை கொண்டு OTP பெறுவதில் சிக்கல் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக சிஏஜி கூட ஆதார் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தது. அதாவது, ஆதாரில் சில குறைபாடுகள் இருப்பதை சிஏஜி ஒப்புக்கொண்டிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மூடிஸ் அமைப்பு மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது பெரும் கனவத்தை ஈர்த்திருக்கிறது.












Click it and Unblock the Notifications