போக்சோ சட்டம்.. ஷாக்கடிக்கும் தீர்ப்புகள்... பெண்கள் வேதனை!
புதுடெல்லி : எந்த வகையான பாலியல் அத்துமீறல்கள் போக்சோ சட்டத்திற்குள் வரும் என நீதிபதிகள் கூறும் வரையறைகள், அவர்கள் கூறும் கருத்துக்கள், போக்சோ சட்டத்தை காரணமாக வைத்தே குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் குறித்து பெண்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாலியல் குற்றங்களைத் தடுக்கத்தான் போக்சோ சட்டமே வந்தது. ஆனால் அந்த நோக்கமே இதுபோன்ற தீர்ப்புகளால் கேள்விக்குறியாகி வருவது விசித்திரமாக உள்ளது.
நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடைபெறும் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளி விபர கணக்கு கூறுகிறது. மற்றொரு புறம் ஒரு நாளைக்கு 350 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடப்பதாகவும், 2015 ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2019 ம் ஆண்டு மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 33.2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறும் கருத்துக்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரிக்க செய்து வருவதாக தாய்மார்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் :
நாக்பூரில் 12 வயது சிறுமியிடம், 39 வயது நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதே நாக்பூரில் 50 வயது நபர் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மும்பையில் 16 வயது சிறுமியை, ஏற்கனவே திருமணமான 39 வயது பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார். தமிழகத்தில் மதுரை அருகே 11 வயது சிறுமி, தனது தாயின் கள்ள காதலனால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் சிறுமிக்கு, அந்த நபர் மூலம் எய்ட்ஸ் நோய் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிர வைத்த நீதிபதிகள் கருத்து :
பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற நபர், அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை நீதிபதி, ஆடைகளை களையாமல் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை தொடுவதோ, ஆடைகளுக்குள் கைகளை நுழைத்து அந்தரங்க உறுப்புக்களை தொடுவதோ போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமை வரம்பிற்குள் வராது என தெரிவித்துள்ளார். மற்றொரு வழக்கில், சிறுமியின் கைகளை பிடித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் தனது பேன்ட் ஜிப்பினை கழற்ற வைப்பது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என தெரிவித்துள்ளார்.
பெண்களின் உணர்வுகளை பிரதிபலித்த சுப்ரீம் கோர்ட் :
நாக்பூர் கோர்ட்டின் உத்தரவிற்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட், இத்தகைய உத்தரவுகள் தவறான முன்னுதாரணமாக மாறி விட வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும். போக்சோ சட்டத்தை காரணம் காட்டி குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது என வேதனை தெரிவித்துள்ளது. பெண்களின் பலரின் உணர்வுகளும் இதுவாகவே உள்ளது.
போக்சோ சட்டம் எதற்கு :
குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காகவும், குழந்தைகளை பாதுகாப்பதற்காகவும் கொண்டு வரப்பட்டதே போக்சோ சட்டம். இச்சட்டம் 2012 ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்காக, ஆயுள் தண்டனையாக இருந்த அதிகபட்ச தண்டனையை மரண தண்டனை என சட்டத்திருத்தம் கொண்டு வந்து, 2018 ல் மத்திய அரசு அவசர சட்டமும் இயற்றியது.
போக்சோ சட்டம் என்னதான் சொல்கிறது :
போக்சோ சட்ட வரைமுறைகள் குறித்து நீதிபதிகள் பலவிதமாக கூறுகின்றனர். இதனால் உண்மையில் போக்சோ சட்டம் என்ன சொல்கிறது, எந்த மாதிரியான குற்றத்திற்கு என்ன தண்டனை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. 21 சட்ட பிரிவுகளைக் கொண்ட இந்த சட்டத்தின்படி, அனைத்து பிரிவுகளின் கீழும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம். 3 மற்றும் 4 பிரிவுகளின்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படலாம். பெற்றோர்கள், உறவினர்கள், கார்டியன் அதற்கு காரணமாக இருந்தால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்க வழிவகை செய்கிறது.