புயலில் தமிழகமே தத்தளிக்க 'சினிமா' பார்த்த மோடி- லோக்சபாவில் வெளுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
டெல்லி: தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் பெஞ்சல் புயல் சீற்றம் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி திரைப்படம் பார்த்து கொண்டிருந்தார் என்கிற செய்தி மிகவும் கவலையளிக்கிறது என்று லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்தார்.
லோக்சபாவில் இன்று மாணிக்கம் தாகூர் பேசியதாவது: எனக்கு முன்னர் பேசிய டிஆர் பாலு, மிக கவனமான விஷயங்களைப் பற்றி பேசினார். பெங்கல் புயல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை, சென்னை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் என 14 மாவட்டங்களில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆடு மாடுகள் உயிரிழந்தன; வீடுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், முதல் கட்டமாக உடனடியாக ரூ2,000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரியிருக்கிறார். ஆனால் மத்திய அரசைப் பொறுத்தவரையில் தொடர்ந்து வரலாற்றுத் தவறை செய்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் புயல் பாதிப்புகளுக்காக இதுவரை ரூ 43,993 கோடி கேட்கப்பட்டுள்ளது. இதில் வெறும் ரூ1229 கோடியைத்தான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதியை கொடுக்க வேண்டும்.
ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உடனடியாக அவசர நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலியுறுத்தல் .. #FengalCyclone @manickamtagore pic.twitter.com/uLTZ2ntWLT
— Virudhunagar MP Office (@manickamtagore) (@VirudhunagarMP) December 3, 2024
தமிழகம் நேற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, பிரதமர் நரேந்திர மோடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற செய்தி மிகவும் கவலையளிக்கிறது. தமிழகமும் புதுச்சேரியும் தண்ணீரில் மிதக்கிற போது, கவனத்துடன் செயல்பட வேண்டிய பிரதமர் மோடி, திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது வரலாற்றுத் தவறு. தமிழ்நாட்டின் உடனடித் தேவையான ரூ2,000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.
முன்னதாக லோக்சபாவில் திமுக எம்பிக்கள் கனிமொழி, டிஆர் பாலு, ராஜ்யசபாவில் வைகோ, புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோரும் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு விவரங்களை விவரித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தை நேற்று பார்த்தார். இதனையே லோக்சபாவில் சுட்டிக்காட்டி இன்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசினார்.












Click it and Unblock the Notifications