டிரம்ப் முடிவால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரிய அடி.. நாஸ்காம் எச்சரிக்கை!
டெல்லி: ஹெச்1பி விசா விண்ணப்பக் கட்டணத்தை 1,00,000 டாலர் ஆக உயர்த்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை இந்தியாவின் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களைப் பாதிக்கும் என்று இந்திய மென்பொருள் மற்றும் சேவைத் துறைக்கான வர்த்தக சங்கமான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான பணியாளர்களை சிறப்பு விசா மூலம் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். இந்த விசாவுக்கு அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றால் போதும் என்ற நடைமுறை முன்பு இருந்தது. ஆயிரம் டாலர்களுக்கு குறைவான கட்டணத்தை மட்டும் அரசுக்கு செலுத்தினால் போதும். ஹெச் 1 பி விசா மூலம், இந்திய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஏராளமான பேர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த ஹெச் 1 பி விசா நடைமுறை அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். எனவே இந்த விசா நடைமுறையை ஒழித்துக் கட்டும் வகையில் புதிய சட்டம் ஒன்றை டிரம்ப் இன்று பிறப்பித்தார்.
அதன்படி, ஹெச் 1பி விசாவில் ஒரு தொழில் வல்லுநரை வேலைக்கு அமர்த்த நினைக்கும் அமெரிக்க நிறுவனம், ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம், அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 88 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் ஊழியர்களை செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் அமெரிக்கா வந்துவிடும்படி தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.
எச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வசிக்கும் தங்கள் ஊழியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய மறுக்கப்படுவதைத் தவிர்க்க 24 மணி நேரத்திற்குள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று பல முன்னணி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், எச்1பி விசா மற்றும் எச்4 விசா வைத்திருப்பவர்கள் புதிய நடைமுறைக்கான விண்ணப்பங்கள் குறித்து புரிந்துகொள்ளும் வரை குறைந்தது இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்றும், சிறப்பான எதிர்காலத்துக்காக வெளிநாடுகளில் உள்ள ஊழியர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை மின்னஞ்சல் மூலம் கேட்டுக்கொண்டுள்ளன.
அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் 5-ல் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் அளவுக்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பணிக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மென்பொருள் மற்றும் சேவைத் துறைக்கான வர்த்தக சங்கமான நாஸ்காம், H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்கள் கட்டணம் விதிக்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இந்திய தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் உலகளாவிய செயல்பாடுகளை சீர்குலைத்து, அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான திறமையான நிபுணர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு, உலகம் முழுவதும் உள்ள வணிகங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. "இந்த வகையான நடவடிக்கை அமெரிக்காவின் பரந்த வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.
H-1B விசாக்களில் பணிபுரியும் இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆன்சைட் பணியமர்த்தல் தேவைப்படும் தொடர்ச்சியான வாடிக்கையாளர் திட்டங்களில் இடையூறுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நாஸ்காம் எச்சரித்தது.
இந்த நிதி ஆண்டில் (ஜூன் 30, 2025 நிலவரப்படி), H-1B விசா அனுமதிகளின் பட்டியலில் அமேசான் 10,044 உடன் முதலிடத்தில் உள்ளது. மைக்ரோசாஃப்ட் (5,189), மெட்டா (5,123) மற்றும் கூகுள் (4,181) போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
அமெரிக்க H-1B விசா திட்டத்தின் முக்கிய பயனாளிகளில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம். இந்த நிதி ஆண்டில் H-1B அனுமதிகளைப் பெற்ற முதல் 10 இந்திய நிறுவனங்களில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (5,505), இன்ஃபோசிஸ் (2,004), LTIMindtree (1,807), மற்றும் HCL (1,728) போன்ற இந்திய முக்கிய நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications