மீண்டும் உயர போகுது சுங்க கட்டணம்... எவ்வளவு உயர்கிறது.. எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா?
நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளுக்குத் தனியாகச் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி: நாடு முழுக்க இருக்கும் நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர உள்ளது. அதேபோல எக்ஸ்பிரஸ் சாலைகளுக்கான சுங்கக் கட்டணமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் போக்குவரத்து உள்கட்டமைப்பு என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாகும். போக்குவரத்து உள்கட்டமைப்பு ஒரு நாட்டில் எப்படி இருக்கிறதோ.. அதைப் பொறுத்தே நகரங்களுக்கு இடையே பொதுமக்கள் எளிதாகப் பயணிக்க முடியும்.
அதேபோல ஒரு இடத்தில் உற்பத்தியாகும் சரக்கை மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் போக்குவரத்து உட்கட்டமைப்பு, குறிப்பாகச் சாலைகள் மிக முக்கியம். இதற்காகவே தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

சுங்கச்சாவடிகள்
பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை புதிய சாலைகளை அமைத்து வருகிறது. நெடுஞ்சாலைகள் தான் பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்தை உறுதி செய்கிறது. இருப்பினும், நெடுஞ்சாலைகளில் பயணிக்க நாம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு சுங்கச்சாவடிகளிலேயே நாம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலை மாறி, பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் நாம் காத்திருக்க வேண்டிய நேரமும் வெகுவாக குறைந்துள்ளது.

கட்டண உயர்வு
நாடு முழுக்க இப்படி 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் சுங்கச்சாவடிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அளித்துவிடும். அதன் பிறகு தனியார் நிறுவனங்களே சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும். சுங்கச்சாவடிகளின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தப்படும்.

எப்போது முதல்
1992இல் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் 2008இல் போடப்பட்ட சாலைகளுக்கு செப். மாதமும் கட்டணம் உயர்த்தப்படும் இதற்கிடையே இப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும். தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் 5 முதல் 10% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான ஆவன பணிகள் இப்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வளவு உயரும்
இந்த கட்டண உயர்வு குறித்த அறிக்கையை வரும் மார்ச் 25ஆம் தேதி நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி தந்ததும் ஏப். 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலகு ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 5 சதவிகிதமும், கன ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையைக் காட்டிலும் 10 சதவிகிதமும் கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

சுங்கக் கட்டணம்
கடந்தாண்டும் இதேபோல லோட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது. 10 முதல் 20 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு மட்டும் சுங்கக் கட்டணம் மூலம் 33,881 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 21% அதிகமாகும். ஒவ்வொரு நாளும் சுமார் ரூ 139 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது. வரும் நாட்களில் வசூலாகும் கட்டணம் மேலும் உயரவே உள்ளது.

எக்ஸ்பிரஸ் சாலைகள்
மத்திய அரசு இப்போது நெடுஞ்சாலைகளைப் போலவே எக்ஸ்பிரஸ் சாலைகளையும் அமைத்து வருகிறது. நெடுஞ்சாலைகளைக் காட்டிலும் எக்ஸ்பிரஸ் சாலையில் இரு நகரங்களுக்கு இடையே நம்மால் வேகமாகப் பயணிக்க முடியும்.. இதில் பயணிக்கவும் கட்டணம் சற்று அதிகமாகவே இருக்கும். இப்போது இந்த எக்ஸ்பிரஸ் சாலைகளுக்கு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.2.19 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான கட்டணமும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications