தமிழ்நாட்டுக்கு மோடி நாளை வரும் முன் அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பு-தமிழ்நாட்டுக்கு ரூ522.34 கோடி நிதி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாட்டில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ரூ.1280.35 கோடி கூடுதல் மத்திய நிதியுதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல்

வெள்ளம், திடீர் வெள்ளம், பலத்த மழை, நிலச்சரிவு, சூறாவளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பீகாருக்கு ரூ.588.73 கோடியும், இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்க ஒப்புதல்
2024-25 நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், கடந்த ஆண்டு இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்ட பீகார், இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது.
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு 2024 ஆம் ஆண்டில் வெள்ளம், திடீர் வெள்ளம், பலத்த மழை, நிலச்சரிவுகள், சூறாவளி புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1280.35 கோடி கூடுதல் நிதி உதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மூன்று மாநிலங்களுக்கு ரூ.1247.29 கோடி மத்திய உதவியாக வழங்க உயர்மட்ட பொறுப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள ஆண்டிற்கான தொடக்க இருப்பில் 50 சதவீதமும், ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ரூ.33.06 கோடியும் சரி செய்யப்படும். இதன்படி, பீகாருக்கு ரூ.588.73 கோடியும், இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் உதவி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வசம் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் யூனியன் பிரதேச பேரிடர் நிவாரண நிதியில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதிக்கு கூடுதல் ஆகும். 2024-25 நிதியாண்டில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியையும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியையும் விடுவித்துள்ளது. மேலும், மாநில பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
முறையான வேண்டுகோள் கிடைக்கும் வரை காத்திருக்காமல், பேரிடர்கள் ஏற்பட்ட உடனேயே, அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழுக்களை இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை
பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. பின்னர் ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
மேலும் ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையையும் மோடி தொடங்கி வைக்கிறார்
- தேசிய நெடுஞ்சாலை எண் 40-ல் வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டை பிரிவில் 28 கிலோமீட்டர் நீளப் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- தேசிய நெடுஞ்சாலை எண் 332-ல் விழுப்புரம் - புதுச்சேரி பிரிவில் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
- தேசிய நெடுஞ்சாலை 32-ல் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள பூண்டியாங்குப்பம் - சட்டநாதபுரம் பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 36-ல் சோழபுரம் - தஞ்சாவூர் பிரிவில் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.












Click it and Unblock the Notifications