பாபர் மசூதி இடிப்பு பற்றி பாடப் புத்தகங்களில் இருந்து ஏன் நீக்கினோம் தெரியுமா? என்சிஇஆர்டி விளக்கம்
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு, குஜராத் வன்முறை தொடர்பான பகுதிகள் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டது சரிதான் என தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் எனப்படும் என்.சி.இ.ஆர்.டி (NCERT) தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் தயாரித்திருந்த 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது மற்றும் குஜராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான பகுதிகள் இடம் பெற்றிருந்தன. பாபர் மசூதியை இடிப்பதற்காக பாஜக நடத்திய ரதயாத்திரை, பாபர் மசூதியை இடித்த இந்துத்துவா கரசேவகர்கள், நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பால் ஏற்பட்ட வன்முறைகள் என 4 பக்கங்களில் இந்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது இந்த பகுதிகள் அனைத்தும் நீக்கப்பட்டு 2 பக்கங்களாக சுருக்கப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி அளித்த பேட்டி: பாடப் புத்தகங்களை நாங்கள் காவி மயமாக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பு, குஜராத் வன்முறை போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அது வன்முறைகளைப் பின்பற்றக் கூடிய குடிமகன்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாடப் புத்தகங்களில் திருத்தங்கள் செய்யப்படுவது வழக்கமே.
சமூகத்தில் மாணவர்கள் வளர்ந்த பின்னர் இத்தகைய வன்முறைகள் ஏன் நிகழ்ந்தன? எப்படி நிகழ்ந்தன? என்பதை தாமாகவே அறிந்து கொள்ளட்டும். மாணவர்கள் பருவத்தில் இவற்றை எல்லாம் கற்பிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதி கொடுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாடப் புத்தகங்களில் இடம் பெறாமல் போனால் அதில் என்ன சிக்கல்? ஆனாலும் நாங்கள் அதைப் பாடப்புத்தகங்களில் சேர்த்திருக்கிறோம். மாணவர்களுக்கு உண்மையான வரலாற்றை கற்பிக்கவே விரும்புகிறோம். மாணவர்களை நாங்கள் யுத்தத்துக்கு அனுப்ப விரும்பவில்லை. இதற்கு பெயர் காவிமயமாதலா? இவ்வாறு தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications