அடுத்த வருஷம் முதல் ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு: அரசு அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசிற்கு கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான மாணவர் சேர்க்கை, இனி நீட் நுழைவுத் தேர்வு வைத்தே நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அவர்களுக்கென தனி நுழைவுத்தேர்வு வைத்து மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. ஆனால் 2020ம் கல்வி ஆண்டு முதல், இவற்றுக்கும், நீட் நுழைவுத்தேர்வு வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

எய்ம்ஸ் மற்றும் ஜிம்பர் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கும், தேசிய மருத்துவ ஆணைய சட்டப்படி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கவுன்சலிங் நடத்தப்படும்.
தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு தனது முடிவை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளாகவே, தமிழகத்திலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கடந்த ஆண்டு, சுமார் 2 லட்சம் பேர் எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ். மருத்துவ சீட்டிற்காகவும், 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜிப்மர் எம்.பி.பி.எஸ். சீட்டுக்காகவும் தேர்வு எழுதியிருந்தனர்.
இந்த ஆண்டு, NEETக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும்.
நீட் தேர்வுக்கான நுழைவு அட்டைகளை பதிவிறக்குவது 2020 மார்ச் 27ல் தொடங்கும். நீட் தேர்வு 2020 மே 3 ஆம் தேதி நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. நீட் யுஜிக்கான ரிசல்ட் அடுத்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications