வாந்தி, மயக்கம் தரும் 'செரூலைடு' நச்சு! நெஸ்லே பால் பவுடரில் பகீர்.. எவ்வளவு சூடு செய்தாலும் அழியாது
டெல்லி: பிரான்ஸ், ஜெர்மனி உட்படப் பல ஐரோப்பிய நாடுகளில் நெஸ்லே நிறுவனம் தனது குழந்தை உணவுப் பவுடர் பார்முலாவை திரும்பப் பெற்றுள்ளது. "செருலியீடு" என்ற நச்சுப் பொருள் காரணமாகவே நெஸ்லே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. செருலியீடு எந்தளவுக்கு ஆபத்தானது.. இவை மற்ற உணவுகளில் ஏற்படுமா.. அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நெஸ்லே நிறுவனம் பிரான்ஸ், ஜெர்மனி உட்படப் பல ஐரோப்பிய நாடுகளில் தனது குழந்தை உணவு பவுடர் பார்முலாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அதில் "செருலியீடு" என்ற நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால் பவுடர்களை திரும்பப் பெறுவதாக நெஸ்லே அறிவித்துள்ளது.

நெஸ்லே அறிவிப்பு
குழந்தைக்கான ஃபார்முலா பால் என்பது 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் ஒரு சத்தான உணவாகும். நெஸ்லேவின் பார்முலாவில் செருலியீடு இருப்பது உறுதி செய்யவில்லை. இருப்பினும், லேசான சந்தேகம் எழுந்துள்ளதால் உடனடியாக நெஸ்லே இதைத் திரும்பப் பெற்றுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வே எங்கள் முதன்மையான முன்னுரிமை என்று நெஸ்லே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்ப் பாதிப்பு எதுவும் உறுதியாகவில்லை என்றாலும் இந்த பவுடரை வைத்திருப்போர் குழந்தைகளுக்குத் தர வேண்டாம் என நெஸ்லே தெரிவித்துள்ளது.
செருலியீடு
செருலியீடு (Cereulide) என்பது மண்ணில் காணப்படும் பாக்டீரியாவால் உருவாகும் அபாயகரமான, வெப்பத்தைத் தாங்கக்கூடிய ஒரு நஞ்சாகும். அரிசி, பால், இறைச்சி போன்ற உணவுகளைச் சரியாகக் கையாளவில்லை என்றால் இந்த செருலியீடு உருவாகும். உணவையும் விஷமாக மாற்றும். ரூம் வெப்பத்தில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை நீண்ட நேரம் வைக்கும்போது, பேசிலஸ் செரியஸ் இஸ்போர்கள் செயல்பட ஆரம்பிக்கும். அப்போது இந்த நச்சு உருவாகும். இந்த செருலியீடு மற்ற பாக்டீரியாக்களை போல அதிக வெப்பத்தில் கொல்லப்படாது. இதனால் எவ்வளவு சமைத்தாலும் இதை அழிக்க முடியாது.
பெரும்பாலான குழந்தைகளுக்கான பவுடரில் பால் பொருட்கள் உள்ளன. பேசிலஸ் செரியஸ் பாக்டீரியா பால் பொருட்கள், தானியங்கள்/ எண்ணெய்கள் வழியாகக் குழந்தைக்கு உணவாகத் தரப்படும் பார்முலாவை மாசுபடுத்தி செருலியீடு நச்சை உருவாக்கலாம். இது உற்பத்தி/ சேமிப்பு நிலைகளில் நிகழும். எனவே, அதை நிச்சயம் குழந்தைகளுக்குத் தரவே கூடாது.
அறிகுறிகள்
செருலியீடு நச்சு வாந்தி, குமட்டல், வயிற்றுப் போக்கு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்.. செருலியீடு இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் 1-6 மணி நேரத்திற்குள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வாந்தி ஏற்படும்.. மைட்டோகாண்ட்ரியல் செல்கள் சீர்குலைவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இவை செல்களின் எனர்ஜி மையங்களான மைட்டோகாண்ட்ரியாவை பாதித்து, செல் மரணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கல்லீரலையும் இது கடுமையாகப் பாதிக்கலாம். நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படும். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயற்கை கில்லர் செல்களையும் பாதித்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது.
இவை அனைத்தும் குறுகிய காலப் பிரச்சனைகள். இந்தப் பாதிப்புகள் ஓரிரு நாட்களில் சரியாகும். இருப்பினும், இது குழந்தைகளிடையே நீரிழிவு நோய்ப் பாதிப்பையும் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாலேயே காரணமாகவே செருலியீடு இருப்பு உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் அதை நெஸ்லே திரும்பப் பெற்றுள்ளது.
தடுப்பது எப்படி!
இந்த ஆபத்துகளைத் தவிர்க்க எப்போதும் சூடான உணவுகளை 60 டிகிரி செல்சியஸுக்கு மேலும், குளிர்ச்சியான உணவுகளை 4 டிகிரி செல்சியஸுக்குக் கீழும் சேமிக்கவும். சமைத்த உணவுகளைச் சூடாகச் சாப்பிடவும். பிரிட்ஜில் வைக்கிறீர்கள் என்றால் இரண்டே மணி நேரத்திற்குள் வைத்துவிடவும். அதை எடுத்துச் சாப்பிடும்போதும் நன்கு சூடுபடுத்திச் சாப்பிடவும். செருலியீடு ஒரு முறை உருவானால் சூடுபடுத்தினாலும் அழிக்க முடியாது என்பதை அவை உருவாவதைத் தடுப்பதே ஒரே வழி!












Click it and Unblock the Notifications