என்னது 5ஜி ஊழலா? எதிர்பார்த்ததைவிட லாபம் குறைவு.. ட்விட்டரில் டிரெண்டாகும் #5G_Scam_Bjp ஹேஷ்டேக்
டெல்லி: இந்தியாவில் 5ஜி அலைவரிசை ஏலம் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில் அதிலும் ஊழல் நடந்து இருப்பதாக கூறி ட்விட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் வழங்கியது. உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது.
5ஜி அலைவரிசை மூலம் சேவைகள் கிடைத்தால் தற்போது அமலில் உள்ள 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3ஜியை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் நமக்கு கிடைக்கும். இந்தியாவில் 5ஜி சோதனை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
ஆதிக்கம் செலுத்திய அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! உண்மையான 5ஜி அவர்கள்தானாம்
5 ஜி ஏலம்
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன. முதல் நாளன்று 4 சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்று உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 40 சுற்று ஏலத்தில் 4 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக மத்திய தொழில்நுட்பத்துறை தெரிவித்து இருந்தது.
சாதனை
முதல் நாள் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர் என்றும் இது கடந்த 2015 ல் நடைபெற்ற 4ஜி ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். 40 வது சுற்று ஏலம் முடிந்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் ரூ.1,50,173 கோடி ஏலத்தை மத்திய அரசு பெற்று இருக்கிறது.
ஜியோ
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட 5ஜி சேவையை வழங்குவதாக தெரிவித்து உள்ளது. 22 சுற்றுகளிலும் தங்கள் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியதாகவும், 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz and 26GHz ஆகிய பேண்டுகளை தங்கள் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் இதில் 700MHz பேண்ட் சிறப்பான 5ஜி சேவையை வழங்க உதவும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
அக்டோபரில் சேவை
5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறினார். இந்த நிலையில், தற்போது அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று கூறி இருக்கிறார்.
Recommended Video
ஊழல் குற்றச்சாட்டு
இதற்கிடையே 5ஜி ஏலத்தில் ஊழல் நடந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ட்விட்டரில் #5G_Scam_Bjp என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ஆயிரக்கணக்கானோர் பதிவிட்டு உள்ளனர். அதில், இந்த ஏலத்தில் ரூ.4.3 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளதை பலர் காரணமாக சொல்கின்றனர். 2012 ஆம் ஆண்டு 2ஜி ஏலத்தில் சுமத்தப்பட்ட புகாரை இத்துடன் ஒப்பிட்டு பலர் விமர்சித்து வருகின்றனர்.