நிச்சயம் "சிஏஏ" வந்திடும் போலயே.. அமித் ஷா கார் நம்பர் பிளேட்டை நோட் பண்ணீங்களா! டிரெண்டாகும் போட்டோ
டெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்தும் என்று மத்திய அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், அமித் ஷாவின் கார் நம்பர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் இறங்கியுள்ளன. தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

இதில் பாஜக பல மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில், கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்ய இருக்கிறது. அடுத்த கட்டமாக வேட்பாளர்கள் தேர்விலும் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
தீவிர ஆலோசனை: இதற்காக பாஜக சார்பில் நேற்றிரவு தீவிர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்துள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டார். இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்காகவே தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

பிரதமர் மோடி வாரணாசி, அமித்ஷா குஜராத் காந்தி நகர், ராஜ்நாத் சிங் உபி தலைநகர் லக்னோவில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட உள்ளது. இதற்காகவே டெல்லியில் நேற்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.
அமித் ஷா கார் நம்பர்: இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிலையில், அவரது கார் நம்பர் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அமித் ஷா 'DL1C AA 4421' என்ற நம்பர் பிளேட் கொண்ட காரில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருவது தெளிவாகத் தெரிகிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துவதற்கு முன்னதாகவே சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கான தேதிகள் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே, அதற்குள் மத்திய அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் எனத் தெரிகிறது.
சிஏஏ சட்டம்: சிஏஏ கடந்த 2019ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் கூட இதுவரை அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இந்தச் சட்டத்திற்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கடுமையான போராட்டங்களும் நடந்தது. தேசிய குடிமக்களின் தேசியப் பதிவேடு இது இணைக்கப்படலாம் என்று பலரும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கூட லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே சிஏஏ விதிகள் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "சிஏஏ என்பது நாட்டின் சட்டம், அதன் அறிவிப்பு கண்டிப்பாக வெளியிடப்படும். இது தேர்தலுக்கு முன் வெளியிடப்படும். தேர்தலுக்கு முன்பு சிஏஏ அமல்படுத்தப்படும். இதில் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications