நள்ளிரவை தாண்டிய கட்சி பணி.. அதிகாலை எழுந்ததும் அரசு பணி.. ஓயாமல் உழைக்கும் மோடி.. குவியும் பாராட்டு
டெல்லி: வெறும் சில மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்து விட்டு, தொடர்ந்து கட்சி பணி மற்றும் ஆட்சி பணி என மாறி மாறி பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாக நெட்டிசன்கள் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இதனால் இப்போதே தேர்தல் நடவடிக்கைகளில் பாஜக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.

பல்வேறு மாநிலங்களிலும் கூட்டணியை உறுதி செய்துவிட்ட பாஜக, அடுத்த கட்டமாகத் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. எந்தெந்த லோக்சபா தொகுதிகளில் வெல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதோ.. அங்கே முதலில் வேட்பாளர்களை அறிவிக்க பாஜக திட்டம் போட்டுள்ளது.
அதன்படி சுமார் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக நேற்றிரவு ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த உயர்மட்ட குழுக் கூட்டத்தில் பல விஷயங்களை ஆலோசித்துள்ளனர். குறிப்பாகத் தேர்தல் தேதி அறிவிப்பு வரும் முன்னரே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக முடிவெடுத்துள்ளது. இவ்வளவு வேகமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அதன் மூலம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு அழுத்தத்தை தர பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்கான வேட்பாளர்களை இறுதி செய்யவே நேற்றைய தினம் கூட்டம் நடந்துள்ளது. நமோ செயலி மூலம் பெறப்பட்ட கருத்துகள், கடந்த கால செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு மூன்று வேட்பாளர்கள் பெயர்களை ஷார்ட் லிஸ்ட் செய்துள்ளனர். அவர்களில் யார் சரியான நபராக இருப்பார்கள் என்பதைத் தேர்வு செய்யும் கூட்டமே நேற்று நடந்துள்ளது.
நேற்றிரவு நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தொடர்பாகவே தீவிர ஆலோசனை நடந்துள்ளது.
நள்ளிரவைத் தாண்டிய ஆலோசனை: பிரதமர் மோடி தனது இல்லத்தில் அமித் ஷா மற்றும் நட்டாவை ஒரு தனியாகச் சந்தித்த நிலையில், மறுபுறம் பாஜகவின் உயர்மட்ட குழுவினர் பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி, பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். இதற்குக் காரணம் அவருடைய பதவியோ அந்தஸ்தோ அல்ல, மாறாக அவரது கடின உழைப்பு தான். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே நேற்றைய கூட்டம் நடந்துள்ளது. பாஜக வேட்பாளர் தேர்வுக்காக நேற்றிரவு நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் நள்ளிரவைத் தாண்டி நடந்தது.
காலை 3.30 மணி வரை இந்தக் கூட்டம் நடந்தது. இதில் முழுக்க மோடி கலந்து கொண்டார். இருப்பினும் காலை 8 மணிக்கே அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜார்கண்ட் கிளம்பிச் சென்றார். 73 வயதான மோடி வெறும் சில மணி நேரம் மட்டுமே தூங்கி அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். இது அவரது கடின உழைப்பை காட்டுவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications