பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த இளைஞர்.. இரவோடு இரவாக கைது செய்த உபி போலீஸ்! யார் அவர்?
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் இளைஞர் ஒருவர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

இதன் காரணமாக நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் முறைகேடு சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
8 முறை: அதில் இளைஞர் ஒருவரே பல முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். அந்த வீடியோவை அவரே எடுத்துள்ள நிலையில், இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மொத்தம் 8 முறை அந்த நபர் பாஜகவுக்கு வாக்களித்தாக தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், பலரும் இதுபோன்ற தேர்தல் முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாடி வருகின்றனர்.
ஃபரூகாபாத் லோக்சபா தொகுதியில் கடந்த மே 13ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது போலத் தெரிகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.
கொந்தளித்த காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி இந்த வீடியோவை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையமே, இந்த நபர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். இப்போதாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்" என்று பதிவிட்டுள்ளது.
அகிலேஷ் யாதவ் தாக்கு: உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவரும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவும் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில்... பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் லூட் (கொள்ளை) கமிட்டி போலத் தான் நடந்து கொள்ளும்" என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையர், "இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்துச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
கைது: இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீசார் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அந்த நபர் ராஜன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. உதவி ரிட்டர்னிங் அதிகாரி பிரதீத் திரிபாதி அளித்த புகாரின் அடிப்படையில் நயா காவ்ன் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபரூகாபாத் தொகுதி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத் தொகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஃபரூகாபாத் தொகுதியில் இடைத்தேர்தல்கள் சேர்ந்து மொத்தம் 18 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில் அதிகபட்சமாக 8 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. கடைசியாக 2009இல் காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்றி இருந்தது. அதன் பிறகு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜகவே இங்கு வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019இல் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புட், பகுஜுன் சமாஜ்- சமாஜ்வாடி கூட்டணியில் பகுஜுன் சமாஜ் சார்பில் மனோஜ் அகர்வால், காங்கிரஸின் சல்மான் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் பாஜகவின் முகேஷ் 5.69 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 2.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பகுஜுன் சமாஜின் மனோஜ் அகர்வால் 3.48 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். காங்கிரஸின் சல்மான் 55 ஆயிரம் வாக்குகளைப் பெற்று டெபாசிட் கூட இழந்தார்.












Click it and Unblock the Notifications