பஞ்சாப் நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் முடிவுகள்: பாஜகவிற்கு படு தோல்வி.. அடித்து தூக்குகிறது ஆம் ஆத்மி!
டெல்லி: பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் முடிவுகள் கணித்துள்ளன.
பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது. பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வந்தது.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளை மத்திய அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நடத்தப்பட்ட நிலையிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

கடுங்குளிர்
விவசாயிகள் கடுங்குளிர், மழை, வெயில் எல்லாவற்றுக்கும் மேல் கொரோனா பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓராண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தல் பிரச்சாரங்களிலும் எதிரொலித்தது.

700 விவசாயிகள் பலி
ஓராண்டுக்கு பிறகு 700 விவசாயிகள் பலியான பிறகு 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து டெல்லி எல்லையில் இருந்து விவசாயிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாபில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடியின் காரை விவசாயிகள் வழிமறித்ததால் பிரதமர் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

கருத்து கணிப்புகள்
இது போன்று பரபரப்புகள் நிறைய பஞ்சாபில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து பல செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன. அதில் நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் நிறுவனத்தின் படி ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 56-61 இடங்களை பெறும்.

பாஜக தோல்வி
தற்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 24 முதல் 29 இடங்களை பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும். அகாலி தளம் கட்சி 22 முதல் 26 வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் பஞ்சாப்பில் என்ன மாதிரியான தேர்தல் முடிவுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கேற்ப தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 1-6 இடங்கள் வரையே பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கட்சிகள் 3 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளது. எனினும் பஞ்சாப்பில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை மார்ச் 10 ஆம் தேதி பார்க்கலாம்.

காங்கிரஸ் ஆட்சி
கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி வென்றது. அங்கு பாஜக - சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து காங்கிரஸ் சார்பாக அமரீந்தர் சிங் முதல்வராக தேர்வானார். அந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்று அபார வெற்றிபெற்றது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை வென்றது. பாஜக - சிரோன்மணி அகாலிதளம் 18 இடங்களை வென்றது. லோக் இன்சாப் கட்சி 2 இடங்களை வென்றது. அமரீந்தர் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி நியமிக்கப்பட்டார். அவரே இந்த தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications