லோக்சபாவில் தலையில் அடித்து சிரித்த நிர்மலா சீதாராமன்.. சுடச்சுட ராகுல் காந்தி கொடுத்த பதிலடி
டெல்லி: பட்ஜெட் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது பட்ஜெட் அல்வா தயாரிப்பு குழுவில் கூட தலித், பழங்குடிகள் யாரும் இல்லை என்று ராகுல் காந்தி போட்டோவை காண்பித்து விமர்சித்தார். இதற்கு அவையில் இருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிரித்தார். இதைத்தொடர்ந்து தலையில் அடித்து சிரித்த நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி சுடச்சுட பதில் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிர்மலா தாக்கல் செய்த இந்த பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தி பேசும் போது மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடினார்.

ராகுல் காந்தி பேசியதாவது:- நமது நாட்டில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. இந்த அச்சம் நம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் ஒரு நபர் மட்டுமே பிரதமர் கனவு காண அனுமதி கிடைக்கிறது. ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மத்திய அமைச்சர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். எனது கேள்வி, இந்தியாவில் ஏன் இந்த அச்சம் ஆழமாக பரவியுள்ளது என்பதுதான். எனது பேச்சைக் கேட்டு பாஜகவினர் சிரித்தாலும் அவர்கள் மனதிற்குள் ஒருவித அச்சத்தில்தான் இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அபிமன்யு, 6 பேர் அமைத்த சக்ரவியூகத்தால் கொல்லப்பட்டார்.
சக்ரவியூகத்தின் மற்றொரு பெயர் பத்மவியூகம். இது தாமரை மலரின் வடிவத்தில் உள்ளது. அதற்குள் பயமும், வன்முறையும் இருக்கிறது. அபிமன்யூவிற்கு என்ன நடந்ததோ அதுபோல, 21ஆம் நூற்றாண்டில் மற்றொரு சக்கரவியூகம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அபிமன்யுவை சக்கரவியூகத்தில் 6 பேர் கொன்றனர். இன்றும் சக்கரவியூகத்தின் நடுவில் 6 பேர் உள்ளனர்.
அந்த 6 பேர் - நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அதானி மற்றும் அம்பானி. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். அப்போது, அஜித் தோவல், அதானி மற்றும் அம்பானி பெயர்களை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "பட்ஜெட்டுக்கு முன்னர் அல்வா தயாரிக்கப்படும் போட்டோவை லோக்சபாவில் காட்டினார்.
இந்த படத்தில் நிதியமைச்சர் அல்வா தருகிறார். இந்த அல்வா தயாரிப்பில் கூட சிலர்தான் ஓபிசி அதிகாரிகள். தலித், பழங்குடிகள் யாருமே இல்லை" அப்போது அவையில் அமர்ந்து இருந்த நிர்மலா சீதாராமன் தலையில் அடித்துகொண்டபடி சிரித்தார். இதனை பார்த்த ராகுல் காந்தி, இது நகைப்புக்குரிய விஷயம் இல்லை. 90 சதவிகித இந்தியர்களை பற்றியது என காட்டமாக பேசினார்.












Click it and Unblock the Notifications