பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் 3 முக்கிய நிபந்தனைகள்- வேளாண் துறைக்காக ஜேடியூ-ஜேடிஸ் மோதல்!
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க 4 கேபினட் அமைச்சர் பதவி உள்ளிட்ட 3 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாம் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ)
லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருக்கின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் 16, நிதிஷ்குமாரின் ஜேடியூ 12 இடங்களை கையில் வைத்துள்ளன. இவைதான் அந்த கூட்டணியின் பிரதான பெரிய கூட்டணி கட்சிகள். இந்த இரு கட்சிகளின் தயவு இல்லாமல் பாஜகவால் மத்தியில் ஆட்சியை இம்மி அளவு கூட நகர்த்திவிட முடியாது என்பதுதான் களம்.
இதனால் சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் கிங் மேக்கர்களாகி இருக்கின்றனர். அத்துடன் தங்களுக்கான 'பேரங்களை'யும் வலுவாக பேசத் தொடங்கி இருக்கின்றனர். தெலுங்குதேசம் கட்சியைப் பொறுத்தவரையில் சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கிறது. கர்நாடகாவின் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியோ, வேளாண் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறதாம்.
நிதிஷ்குமாரின் ஜேடியூ மொத்தம் 4 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்கிறதாம். இதில் வேளாண் துறை இலாகா கட்டாயம் வேண்டும் என்கிறதாம். அத்துடன் பீகாரில் முன்கூட்டியே சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும்; பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதும் நிதிஷ்குமாரின் நிபந்தனைகளாம்.
ஆனால் பீகாரில் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்தவே கூடாது என்பது பீகார் பாஜக தலைவர்கள் கோரிக்கையாம். ஜேடியூ, லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை வைத்து தம்மை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இதற்கு டெல்லி மேலிடம் ஒரு போதும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பது பீகார் பாஜக தலைவர்களின் எதிர்ப்பாம்.
இந்த 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி சுமூகமாக நடக்கும் என மிரட்டலுடன் கூறியிருக்கிறதாம் ஜேடியூ. அணி தாவுவதில் வல்லமை கொண்டது ஜேடியூ. எந்த நேரத்திலும் எந்த கூட்டணிக்கும் தாவக் கூடியது ஜேடியூ என்பதால் பாஜக மேலிடம் தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications