லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக.. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
டெல்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக 'இந்தியா கூட்டணி' கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லாஅனுமதி வழங்கவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த திங்கள் கிழமை முதல் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வந்தது. இன்றும் இந்த வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு, அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி பேசிய கருத்துகளே இந்த கடும் எதிர்ப்புகளுக்கும் கூச்சல் குழப்பங்களுக்கும் வழிவகுத்தன.

அமித் ஷா பேசும் போது, எதிர்க்கட்சிகள் நடத்தை பற்றி பேசுகிறார்கள். அவர்களின் தலைவரே கண்ணடித்து, பிரதமரை கட்டித்தழுவி, பறக்கும் முத்தம் கொடுக்கும்போது, அவர் சீண்டுகிறார் என்பதையே காட்டுகிறது" என்று குறிப்பிட்டார். அமித்ஷா இவ்வாறு பேசியதும் கோபம் அடைந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற மரபுக்கு முரணான வார்த்தைகளை அமைச்சர் பயன்படுத்துவதாகக் கூறி தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் கோஷங்கள் மற்றும் அமளிக்கு மத்தியிலேயே குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், நம்பிக்கையில்ல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளுக்கு வெறும் 238 எம்.பி.க்களின் ஆதரவே இருப்பதால், தோல்வியில் முடியும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது.
238 எம்.பி.க்களில், காங்கிரஸுக்கு 99 பேரும், சமாஜ்வாடி கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு மீதமுள்ள இடங்களும் உள்ளன. அதேசமயம், ஆளும் தரப்பிற்கு 293 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240, ஐக்கிய ஜனதா தளத்திற்கு 16, தெலுங்கு தேசம் கட்சிக்கு 12 மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அடங்கும்.
முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லாஅனுமதி வழங்கவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications