ஐரோப்பிய. ஒன்றியத்துடன் தடை இல்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்ற காலக்கெடு எதுவும் இல்லை- மத்திய அரசு
டெல்லி: இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடை இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய 15-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான நட்பு நாடுகள் என்று குறிப்பிட்ட மோடி, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்திய உறவின் நெருக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.
இம்மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப், இந்தியாவில் 91 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இந்திய- ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவு மிகவும் சுமூகமாக, ஆரோக்கியமானதாக உள்ளது.
100 பில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இன்றைய உச்சிமாநாட்டில் வர்த்தகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருநாடுகளின் தலைவர்களும் விவாதித்தனர். சர்வதேச அளவில் அமைதியையும் நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்படுவது எனவும் தீர்மானித்துள்ளன.

இந்தியா -சீனா இடையேயான எல்லை பிரச்சனை குறித்த நிலையையும் இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி விவரித்தார். இவ்வாறு விகாஸ் ஸ்வரூப் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையில்லாத வர்த்தக ஒப்பந்தத்தை உள்ளடக்கிய Bilateral Trade and Investment Agreement- BTIA எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விகாஸ் ஸ்வரூப், இது தொடர்பாக இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. இருதரப்பும் இது குறித்து பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications