அரசு தனது அத்துமீறல்களை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை இல்லை... விவசாய சங்கம் அதிரடி
டெல்லி: மத்திய அரசு தனது அராஜக போக்கை நிறுத்தும் வரை, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று போராட்டத்தை நடத்தி வரும் விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாத காலமாகத் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சட்டங்கள் திரும்பப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
அதிலும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் திடீரென்று வன்முறை வெடித்தது. அப்போது முதலே விவசாயிகளின் போராட்டத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரே.. தியாகத்தின் அடையாளமே.. சசிகலாவை வாழ்த்தி மதுரையில் அதிமுக பிரமுகர் போஸ்டர்
அதிகரிக்கும் அரசின் பிடி
டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக காவல் துறையினர் பல விவசாயிகளை கைது செய்துள்ளனர். மேலும், நிலைமை மோசமாவதைத் தடுக்க விவசாயிகள் போராடும் இடங்களில் இணையச் சேவையும் முடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் போராடும் இடங்களில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி
இந்நிலையில் இது குறித்த விவசாய சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தடுப்புகளைப் போடுவது, வேலிகள் அமைப்பது, சாலைகளை மூடுவது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டுள்ளது. அதேபோல பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பினரை அனுப்பி போராட்டத்தைச் சீர்குலைக்கவும் மத்திய அரசும், காவல் துறையினரும் செயல்படுகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்
மேலும், "இணையச் சேவை முடக்குவது, ட்விட்டர் கணக்குகளை முடக்குவது போன்ற செயல்கள் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை அரசு தடுக்க நினைக்கிறது. இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இது அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தை இல்லை
அரசும், காவல் துறையும் போராடும் விவசாயிகள் மீதான அராஜகத்தை உடனடியாக கைவிட வேண்டும். அதேபோல தற்போது கைது செய்துள்ள விவசாயிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அரசிடம் இருந்து இதுவரை பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வரவில்லை என்றாலும்கூட, இதையெல்லாம் அரசு செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்று முடிவு செய்துள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன்பாடு இல்லை
மத்திய அரசுக்கும் விவசாய தலைவர்களுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. அதில் இரு தரப்பிற்கும் இடையே எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. விவசாய சட்டங்களை 1.5 ஆண்டுகள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், விவசாய சட்டங்கள் திரும்பப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.