பெட்ரோல், டீசல் வாகனங்களின் கதை முடிய போகுது.. நிதின் கட்காரி சொன்ன மேஜர் விஷயம்
டெல்லி: பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், பயோ எரிபொருள், சிஎன்.ஜி, எல்.என்.ஜி போன்ற மாற்று எரிபொருளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அளவுக்கதிகமான பயன்பாடு காரணமாக, எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி நெருக்கடியை சந்திக்கும் என்று கருதப்படும் நிலையில், நிதின் கட்காரி எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு, நீண்டகால அடிப்படையில் எதிர்காலம் இல்லை என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்காரி இது தொடர்பாக பேசியதாவது:-

எதிர்காலத்தின் எரிபொருள்
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள், பயோ எரிபொருள், சிஎன்ஜி, எல்.என்.ஜி மற்றும் எலக்ட்ரிக் பவர்டிரெயின்ஸ் போன்ற மாற்று எரிபொருளில் கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை இறக்குமதி விவகாரத்திலும் சுற்றுச்சூழலில் தாக்கம் ஏற்படுத்துவதிலும் தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
ஹைட்ரஜன் எரிபொருள் திட்டத்தை சோதனை அடிப்படையில் அரசு தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ், வால்வோ, அசோக் லைலாண்ட் மற்றும் மகிந்திரா & மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் ஹைட்ரஜன் எரிபொருள் சோதனையை தொடங்கிவிட்டன. தற்போது 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் லாரிகள் மற்றும் பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஹைட்ரஜன்தான் எதிர்காலத்தின் எரிபொருள், மாற்று எரிபொருளாக எத்தனால் முக்கியத்துவம் வாய்ந்தது.
பல்வேறு மூலப்பொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. வாகனங்கள் E20 எரிபொருளில் இயங்கிக்கொண்டிருக்கும்போதே, ஃப்ளெக்ஸ்-ஃப்யூல் என்ஜின்கள் உருவாக்கும் பணியில் தொழில்துறை நிறுவனங்கள் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றன" என்றார்.
தேவை அதிகரிக்கும்
மேலும் பொதுப்போக்குவரத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்து பேசிய நிதின் கட்காரி, பாதுகாப்பு தரநிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருகிறது என்றார். இது தொடர்பாக நிதின் கட்காரி கூறுகையில், "பேருந்து பதிவு விவரங்கள் இனி வாகன் போர்டலில் நேரடி ஆய்வு மற்றும் வீடியோ ஒப்புதல்களுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
வெறுமனே செலவுகளை மட்டும் குறைப்பதில் கவனம் செலுத்தாமல் தரம் மற்றும் பாதுகாப்பு, சொகுசு ஆகியவற்றிற்கு பேருந்து பாடி உற்பத்தியாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சார பேருந்துகளுக்கான தேவை மட்டும் 1,50,000- ஆக உயரும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகளின் உற்பத்தி திறன் தற்போது ஆண்டுக்கு 70 ஆயிரமாக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications