மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இல்லையா? ஜனநாயகப் படுகொலை - எதிர்கட்சி எம்பிக்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் மற்றும் ஜீரோ ஹவர் தொடர்பான அறிவிப்பு ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் மற்றும் ஜீரோ ஹவர் தொடர்பான அறிவிப்பு ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அரசை கேள்வி கேட்கும் உரிமையை எதிர்க்கட்சி எம்.பிக்கள் இழக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அமலில் இருந்ததால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப் போனது. இந்த சூழலில் நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில் வரும் 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. அதேசமயம் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீரோ ஹவர் அரை மணி நேரம் மட்டும் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தொடர் நடைபெறும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி காலையில் 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டத்தொடர் நடைபெறும். மறுநாள் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணிவரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் செப்டம்பர் 14ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணிவரை கூட்டதொடர் நடைபெறும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 1 மணி வரைக்கும் கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதற்கு எதிர்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டரில், அதிகப்படியான அதிகாரிகள் வருவதும், செல்வதும் தான் பிரச்சினையா. ஒரு நாளில் ஒன்றிரண்டு துறை சார்ந்த கேள்விகள் எழுப்ப அனுமதிக்கலாமே. இதற்காக அமைச்சர்களுக்கு உதவி செய்ய 5 முதல் 10 அதிகாரிகள் தேவைப்படுவர். அதுவே நிதின் கட்கரி போன்ற அமைச்சர்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் எதிர்கட்சியினரின் ஒவ்வொரு குரலையும் நசுக்குகிறது. கேள்வி நேரத்தை அனுமதிக்காததன் மூலம் கோவிட் 19க்கு பின்னால் மறைந்திருக்கும் எதிர்ப்பின் குரலைக் நசுக்குகிறது. இந்த அரசாங்கத்திற்கு பொறுப்பு இல்லை என்று பதிவிட்டுள்ளார். பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஜாவித் பதிவிட்டுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி டெரிக் ஓ பிரியன் தனது ட்விட்டரில், கேள்வி நேரத்திற்கான கேள்விகளை எம்.பிக்கள் 15 நாட்கள் முன்னதாகவே சமர்பிக்க வேண்டும். கூட்டத்தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. அப்படியிருக்கையில் ஏன் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசை கேள்வி கேட்கும் உரிமையை எதிர்க்கட்சி எம்.பிக்கள் இழக்கின்றனர்.
லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர் மாலை நேரத்திற்கு மாற்றம் - கேள்வி நேரம் ரத்து