தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கான வரலாற்று கால அநீதியை சரி செய்ய சரியான தருணம் நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல்
டெல்லி: தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்டு வருகிற அநீதியை சரி செய்ய சரியான தருணம் இதுதான் என உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ரவீந்திர பாட், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல்,ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அரசியல் சான பெஞ்ச் இன்று இத்தீர்ப்பை வழங்கியது.

தலைமை நீதிபதி சந்திரசூட் தமது தீர்ப்பில், திருமணம் ஒரு நிலையான மாறாத அமைப்பு என்பது ஏற்புடையது அல்ல. திருமண சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய திருமண சீர்திருத்தங்கள் சட்டங்கள் மூலமே மேற்கொள்ள முடியும். நாடாளுமன்றத்தில் திருமண சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. நீதிமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது; நாடாளுமன்றம்தான் சட்டத்தை இயற்ற வேண்டும்; திருமண சட்ட சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும். தன்பாலின உறவு குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். திருநங்கை ஒருவரால் பாலின உறவில் இருக்க முடியும் என்கிற போது அவரது திருமணம், சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல், தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்தை ஆதரிக்கும் வகையில் தீர்ப்பை வாசித்தார். அதில், தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான மாற்றுப் பாலினத்தவர் திருமணம் மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தினுடைய 2 பக்கங்களாகப் பார்க்க வேண்டும் என்றார்.
மேலும் நாட்டில் தன் பாலின ஈர்ப்பாளர்கள்- ஓரின சேர்க்கையாளர்களுக்கு பல்லாண்டுகளாக அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை சரி செய்யக் கூடிய தருணம் இது. தன் பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ளுதல் உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். தன்பாலினத்தவர் மீதான பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட திருத்தம் தேவை என்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஏற்கிறேன் என்றும் சஞ்சய் கிஷண் கவுல் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
"ஒரே பாலின உறவுகள் என்பது உணர்வுப்பூர்வமான உறவுகளாக பழங்காலம் தொட்டே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சூஃபி மரபுகளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன; தன் பாலினத்தவர் அமைப்புகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது திருமண சமத்துவத்தை நோக்கிய ஒரு படிநிலைதான் என்றும் சுட்டிக்காட்டினார் நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல்.












Click it and Unblock the Notifications